Oru Manithan Oru Veedu Oru Ulagam
By Jayakanthan
4/5
()
About this ebook
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
Read more from Jayakanthan
Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsInnum Oru Pennin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Sirukathaigal Thoguppu - 2 Rating: 4 out of 5 stars4/5Sila Nerangalil Sila Manithargal Rating: 4 out of 5 stars4/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Oru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Cinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkaga Azhuthan? Rating: 4 out of 5 stars4/5Illathavargal Rating: 5 out of 5 stars5/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Moongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsKathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsAyudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Kokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Andha Akkavai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Karu Rating: 0 out of 5 stars0 ratingsGangai Engey Pogiraal? Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsKai Vilangu Rating: 4 out of 5 stars4/5Sundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Manithan Oru Veedu Oru Ulagam
Related ebooks
Manipallavam Rating: 4 out of 5 stars4/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Aadhavan Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Gurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Malar Rating: 4 out of 5 stars4/5Mercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Kai Vilangu Rating: 4 out of 5 stars4/5Ezhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsPanuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsKottaipurathu Veedu Rating: 5 out of 5 stars5/5Itharku Munbum Itharku Piragum Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratingsRajapudhana Ilavarasi Rating: 3 out of 5 stars3/5Oozhiyin Dhinangal Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsPaettai Rating: 0 out of 5 stars0 ratingsManaamiyangal Rating: 0 out of 5 stars0 ratingsIllathavargal Rating: 5 out of 5 stars5/5Koondu Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsThalaikeezh Vikithankal Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsAdimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Puyalilae Oru Thoni Rating: 3 out of 5 stars3/5Gopalla Gramam Rating: 1 out of 5 stars1/5Vekkai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oru Manithan Oru Veedu Oru Ulagam
3 ratings0 reviews
Book preview
Oru Manithan Oru Veedu Oru Ulagam - Jayakanthan
http://www.pustaka.co.in
ஒரு மனிதன் ஒரு வீடு
ஒரு உலகம்
Oru Manithan Oru Veedu
Oru Ulagam
Author:
த. ஜெயகாந்தன்
T. Jayakanthan
For more books
http://www.pustaka.co.in/home/author/jayakanthan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
முன்னுரை:
பொதுவாக எனது புத்தகங்களுக்கு நான் எழுதும் முன்னுரைகளைப் பலரும் பாராட்டுகிறார்கள். பயனுடையது என்றும் சொல்லுகிறார்கள். ஆனால், எனது அன்புக்கும் மதிப்புக்கும் பெரிதும் பாத்திரமான ஒரு நண்பர் – ‘நீங்களே உங்கள் கதைகளைப் பற்றிப் பேசிக் கட்டியங் கூறுவது எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை’ என்று ஒவ்வொரு முறை சந்திக்கிறபோதும் கூறிவருகிறார். அவர் ஏன் அவ்விதம் கூறுகிறார் என்பதும் எனக்குப் புரிகிறது. ஆயினும் நான் எழுதுகிற காரியமே சில நிர்ப்பந்தங்களின் நிமித்தமே நிகழ்வது என்பதால், இந்த முன்னுரைக்கும் அதே நிர்ப்பந்தம் காரணமாகிறது.
சரத்சந்திரர் கூடத் தனது நாவல்களுக்கு முன்னுரை எழுதுவதில்லையென்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்தேன். ‘நானூறு பக்கம் எழுதிய நாவலில் விளக்க முடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரை விளக்கி, வாசகர்கள் விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்’ என்பாராம் சரத்சந்திரர்.
சரத்சந்திரர் சொல்வது அவருக்குச் சரி. ‘நானூறு பக்கம் விளக்காத ஒரு விஷயத்தை எழுதுகிற நான் இன்னும் நாலு பக்கம் ஏன் எழுதக்கூடாது? விளங்குகிறவனுக்கு இந்த நாலு பக்கமே போதும்’ என்று எனக்குத் தோன்றுவதால் நாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.
ஒரு நாவலைப் பற்றிப் பேச, எழுதுகிறவனுக்கு அந்த நானூறு பக்கத்தில் நிச்சயம் இடம் ஏற்படாது. அதன் முன்னுரையில்தான் சொல்ல முடியும், அல்லது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், என்னைப் பற்றியும் எனது எழுத்துக்கள் பற்றியும் நடக்கிற விவாத விமர்சனங்களுக்கு இன்னொரு பத்திரிகையையோ இன்னொருவரின் தயவையோ நாடாமல் சுதந்திரமாக, சொந்தமாக இந்தப் பக்கங்களை என்னால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
என் கதைகளை மட்டும் விரும்பிப் படிக்கிறவர்கள், இது அவற்றுக்குச் சம்பந்தமற்ற விஷயம் என்று கருதுகிறவர்கள் இவற்றைப் படிக்காமல் புரட்டித் தள்ளிவிட்டு தங்களுக்கு உகந்த பிற பக்கங்களைப் படிப்பது குறித்து எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை.
ஒரு நாவலையோ, ஒரு தொகுதியில் உள்ள சிறுகதைகளையோ எழுதிய காலத்தில் அது பற்றிக் கூறப்படுகிற கருத்துக்களையும் சந்தேகங்களையும் நான் எந்தவிதப் பிரதிபலிப்பும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
வாசகர்களின், விமர்சகர்களின், பத்திரிக்கைக்காரர்களின் ஆலோசனைகள் எதுவும் எனது எழுத்துக்களை அது எழுதப்படுகிறபோது பாதிக்காத மனக் கவசங்களை நான் அணிந்து கொள்கிறேன்.
எல்லாருடைய அபிப்பிராய – விமர்சன – விவாத – தூஷண - ஸ்தோத்திர இரைச்சல்களை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நான் ஜடமல்ல என்று காட்டுவதற்காகவும், அவர்களையும் அவர்களது இலக்கியப் பிரக்ஞைகளையும் அங்கீகரிக்கும் பொருட்டும் நான் முன்னுரையில் கதையைப் பற்றியும் என்னைப் பற்றியும் பேசுகிறேன்.
தமிழ் இலக்கிய மரபில் இது மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது. ‘பாயிரம் அல்லது பனுவல் அன்று’ என்பது நன்னூல் சூத்திரம்.
ஆசிரியன், மாணவன், நண்பன் ஆகியோர் ஒரு நாலுக்குப் பாயிரம் எழுதலாம். எனது முன்னுரைகளை இந்த மூன்று கோணங்களிலிருந்தும் நான் எழுதுகிறேன்.
எவ்வளவு எழுதினாலும் ‘இன்னும் விளக்க’ எதிலும் இன்னும் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன்.
இந்தக் கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களும் தரையில் காலூன்றி நிற்கிற – நாம் எங்கெங்கோ சந்தித்த மனிதர்கள்தான் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். அதே மாதிரி இதில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளும் உணர்ச்சிகளும்கூட நாம் நமது வீட்டிலும் நமது உறவிலும் அனுபவித்தவை தாம் என்று சொல்லுதல் தகும்.
ஆனால் இதில் வருகிற ஹென்றி மிகவும் கற்பனாலங்காரமாகத் தோற்றமளிக்கிறான் - எனும் கூற்றை மறுப்பது சாத்தியப்படாது என்று அறிந்தே இவனை நான் அறிமுகம் செய்தேன்.
காந்திஜியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொல்லவில்லையா? ‘வருகிற தலைமுறையில் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று சொல்லுவதை நம்புவது கூடச் சிரமமானதாயிருக்கும்’ என்று.
அந்தப் பாத்திரம் மிகவும் ‘ஐடியலிஸ்டிக்’காக இருக்கிறதுதான். ‘ஐடியிலிஸ்டிக்’கான மனிதர்களை, ஏன் - ‘மிஸ்டிக்’கான மனிதர்களைக்கூட நடைமுறைவாழ்க்கையில் நாம் நிறையச் சந்திப்பதில்லையா?
‘இப்படியொரு மனிதனைப் பார்த்ததில்லை’ என்ற கூறுவது ‘இது சாத்தியமல்ல’ என்பதற்கு வலுவூட்டும் கருத்து ஆகாது. ‘பார்ப்பீர்கள் - பாருங்கள்’ என்பதே அதற்குப் பதிலாகும். ‘தேடுங்கள்; கண்டடைவீர்கள்’ என்ற ஏசுநாதரின் வாக்கு அவர் தன்னைப் பற்றி, தீர்க்கதரிசிகளைப் பற்றி, நல்லவர்களைப் பற்றி, நல்லவை பற்றிக் கூறிய வாசகமாகவே நான் சொல்லுகிறேன்.
பிறவிக் குருடனான திருதராஷ்டிரன் தனது புத்திரர்களான தருமனையும், துரியோதனனையும் அனுப்பி உலகமும் மனிதரும் எவ்விதம் இருக்கிறார்கள் என்று அறிந்து வந்து கூறப் பணித்தனன்.
தருமன் உலகையும் மனிதரையும் பார்த்து மகிழ்ந்து கூறினான்: ‘புருஷர்கள் உத்தம சீலராய், பெண்கள் பதிவிரதைகளாய், மக்கள் சத்திய சந்தராய் வாழ்கிறார்கள்’ என்று.
துரியோதனன் சொன்னான்: ‘புருஷர்கள் சோரர்களாகவும், ஸ்திரீகள் விபசாரிகளாகவும், மக்கள் காமுகர்களாகவும் இருக்கிறார்கள் என்று.
குருட்டுத் திருதராஷ்டிரன் உலகையும் மக்களையும் தருமனைப் போலவோ, துரியோதனனைப் போலவோ அல்லாமல், அவர்கள் கூற்றினால் - முழுமையாகவும் சரியாகவும் புரிந்து கொண்டானாம்! இந்தக் கதையை ஒரு கிராமத்துக் கிழவனே எனக்குச் சொன்னான்; வியாசன் அல்ல.
மகாபாரதம் பெரிய இதிகாசம் என்று தெரியாத பாமரர்களால்தான் அது எனக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. நமது வாழ்க்கையில், படித்த முட்டாள்களும் பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள். நகரம் வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறது. கிராமம் அழகிய இயற்கைச் சூழலில் தானும் ஒரு அழகு, இயற்கையின் வதனத்தில் தான் ஒரு சிந்தூரத் திலகம் என்றெல்லாம் தெரியாமல் உழைப்பை யோகமாகப் பயின்று வாழ்கிறது.
நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம்.
வாசகர்களில், விமர்சகர்களில் தருமர்களும் உண்டு, துரியோதனர்களும் உண்டு. நான் திருதராஷ்டிரன் நிலையிலிருந்தே இதனை எழுதினேன்.
இதை நான் ஒரு தொடர்கதை என்றே அழைக்க விரும்புகிறேன். பத்திரிகையில் வெளியாகும் தொடர்கதைகள் எதையும் நான் படித்துப் பயின்றதில்லை. அது போல் ஒன்று எழுத வேண்டும் என்று முயன்றதுமில்லை. நாவல் என்று ஏதோ ஒன்று இருப்பதாக நம்பியதுண்டு. அது தமிழில் வளம் பெறவில்லை என்று விமர்சனக்காரர்கள் சொன்னார்கள். அதற்கான எவ்விதமான தயாரிப்புமின்றி ஏதோ ஒரு ஆசையினால் எனக்குத் தகுதியிருப்பதாக நம்பி, இந்த வசை என்னால் கழியட்டும் என்று பெரும் ஆசை கொண்டு (பேராசை அல்ல) நான் பேசியதும் உண்டு. அதற்கான முயற்சிகள் ஏதும் நான் செய்ததில்லை. திட்டமிட்டு ஒரு விஞ்ஞானி மாதிரி அல்லது ஆராய்ச்சிக்காரன் மாதிரி எல்லாவிதமான ‘ரெஃபரன்ஸ்’களுடனும் முனைந்து மனம் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடுவது எனக்கு மிகவும் சலிப்பைத் தருகிறது. அதற்குரிய நேரமும் நிதானமும் எனக்கில்லை. எனவே நாவல் என்பது என்னைப் பொறுத்தவரை கைக் கெட்டதாக கனவு என்று அது பற்றிய கனவுகளிலேயே நான் சஞ்சரித்தேன்.
நான் எனது சூழ்நிலைக்கேற்ப, எனது இயல்பு கெடாமல் சூழ்நிலையில் கரைந்து போகாமல் அவற்றைச் சரியாகவே பிரதிபலிக்குமாறு படைக்கப்பட்டிருக்கிறேன். சூரியனின் கதிர்கள் எல்லாப் பொருள்களின் மீதும் படுகிறது. ஆனால் அந்தச் சூரியனையே ஒரு கண்ணாடியோ அல்லது கையளவுத் தண்ணீரோ (Reflector) தான் திரும்பவும் காட்டும். அப்படி ஒரு சிறிய கண்ணாடி நம் முள் எங்கேயோ ஒட்டிக் கொண்டிருப்பது சர்வ சத்தியம். நான் அதன் மினுக்கல்களை இந்த வாழ்க்கையில் எத்தனையோ இருளிலும் காண்கிறேன்.
‘ஒரு மனிதன்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய கதையை என்னுள் நான் காதலித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கதையின் ஆரம்பமும் முடிவும், இடையில் நடப்பனவும் மிகத் தெளிவாக என்னுள் அடிக்கடி முகிழ்த்து சரம்சரமாய்ப் பெருகும். இந்தப் புவனம் முழுவதும் மலர்க்காடாய்த் தெரியும். ஒவ்வொரு இதழும் மிகத் தெளிவாகத் தென்படும். பிறகு எல்லாம் கனவு போல் மறந்துபோகும். கண்ட கனவை நினைவு கூர்வதற்காகக் கண்களை மூட மறுபடியும் ஒரு கனவு தொடரும். இப்படி ஒரு தன்னிலை மயக்கமாக, சுயானுபூதியாக இந்தக் கதை இன்னும் நிறைய என்னோடு இருக்கிறது.
பின்னர் இந்தக் கதைக்கு ‘ஒரு வீடு’ என்ற தலைப்புக் கொடுக்கலாமா? என்று யோசித்து, ‘ஒரு உலகம்’ என்று மாற்றி, கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து என் கனவு மாதிரியே எல்லாவற்றோடும் தொடர்பு கொண்ட ஒரு முழுமையான தலைப்பு மிகப் பொருத்தமாகக் கிடைத்தது. வீட்டில் மனிதரும் உண்டு. மனிதரில் உலகமும் உண்டு. இந்த மூன்றும் எப்படி வேண்டுமானாலும் ஒன்றோடொன்று புகுந்து கொள்ளும், அறம், பொருள், இன்பம் மாதிரி; பக்தி, ரசனை, படைப்பு மாதிரி.
இந்தத்தலைப்புக் குறித்து, இதை எழுதத் தொடங்கும் போது நான் ஒரு விளக்கம் தந்திருக்கிறேன்:
‘ஒரு உலகமா? – ஓர் உலகமா?’ வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் ஆக இருப்பின் ‘ஓர்’ தான் போட வேண்டும் என்பது தமிழ் இலக்கண மரபு. இது தெரிந்தே ‘ஒரு உலகம்’ என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் சரியாகக் கடைப்பிடிப்பதென்றால் ‘ஓர் உலகம்’ என்று எழுதுவதுகூடச் சரியில்லை. ‘ஓருலகம்’ என்றே எழுதுதல் வேண்டும். எளிமை கருதி கால வழுவினால் ‘ஓர் உலகம்’ என்று எழுதிப் புரிந்துகொள்கிற வழக்கத்தை நாம் தற்காலத்தில் கைக்கொண்டுள்ளோம். அதே போன்று பொருள் கருதி ‘ஒரு உலகம்’ என்று எழுதுவதே இங்கே பொருந்தும் என்று நான் துணிந்தேன்.
இலக்கணத்தில் சொல்லியிருக்கிறது என்பதற்காக வேறு பலமான காரணங்கள் இருந்தும்கூட அவசியம் கருதி ஒரு மாற்றத்தைச் செய்யவோ, ஏற்கவோ, பக்குவம் பெறாவிட்டால் ஒரு மொழியும் வளர்ச்சியும் முடங்கிப் போகும்.
‘அவளே ஒரு உலகம்’ என்று சொல்லும்போது உலகம் என்று நாம் கருதுகிற இந்தப் பூமி உருண்டைக்கும் இங்கே சொல்லப்படுகிற உலகத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஓருலகப் பிரஜை என்பதற்கும் ஓர் உலகப் பிரஜை என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஓருலகம் என்பது ஒரு ‘தியரி’யும், ஓர் உலகப் பிரஜை என்பது இப்போதே ஓர் நடைமுறையும் ஆகும். எனவே பழைய மரபுகளுக்கு விரோதமாக இதனை விரும்பி, இலக்கணம் தெரிந்து, இலக்கணம் தெரிந்து, ஓர் அர்த்தத்துடனேயே நான் ‘ஒரு உலகம்’ என்று எழுதியிருக்கிறேன்.
இந்த நாவலின் கதை இடம் பெறுகிற கிராமம் இன்ன இடத்தில்தான் என்று என்னால் சொல்லமுடியாது. காலத்தைக்கூடக் குறிப்பாக எப்போது என்று சொல்லுவது என்னுடைய நோக்கமால்ல! சில சம்பவங்கள் சில பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படும் காலச் சூழ்நிலை முதலியன இது தற்காலம் அல்லது நிகழ்காலம் என்பதை உணர்த்துவதாக அமைந்தால் அதற்குக் கூட நான் பொறுப்பில்லை.
எந்த மண்ணின் வாடையையும் இந்தக் கதையில் வீச வைக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குக் கிடையாது! வட்டார வழக்குகளை வடித்துத் தரவும் எனக்கு உத்தேசமில்லை. மனிதனுக்கு இந்த மனித வாழ்க்கையைப் பற்றிய பற்றும் பயமும், கதை கதையாக அமைந்த தனி மனிதர்களால் உருவாகும் வாழ்க்கை பற்றிய வரலாறும், இந்த வாழ்க்கை பற்றிய ஒரு தனி மனிதனுடைய நிறைவும், பயமும், நம்பிக்கையும் இந்த நாவல் பிறக்கக் காரணமாயின!’ என்று எழுதி அதைத் தொடர்ந்து இந்தத் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கினேன். ஒரு தயக்கமுமில்லாமல் ‘லாரியில் மொத்தம் ஏழுபேர் இருந்தார்கள்’ என்று ஆரம்பித்தேன்…
மிகச் சாதாரணமான எந்தத் தொடர்கதை எழுத்தாளரையும்போல ஒவ்வொரு வாரமும் ‘எத்தனை பக்கம் எழுதினால் எத்தனை பக்கம் அச்சில் வரும்’ என்கிற கடமை நிறைவேற்றமாகவே இதனை நான் எழுதினேன். ஆனால் ஒவ்வொரு வாரமும் சுவை கூட்ட வேண்டும் என்பது எனது கடமை என்று நான் நினைக்கவில்லை. அதை எழுதுகிற போதே, எழுதுகிற அனுபவத்தினால் ஏற்பட்ட சுவை எனக்குக் கூடிப்போனதால் மேலும் பதினைந்து வாரங்கள் இந்தத் தொடர்கதையைத் தொடர்ந்து எழுதினேன். ஆனாலும் எனக்கு இதை முடிக்க மனமில்லை. முடிவும் தெரியவில்லை. இதை எழுதி எழுதி வெளியிடாமல், முன்புபோல் மனத்தில் அசைபோட்டு நான் மட்டும் கொஞ்ச காலம் லயிக்க வேண்டும் என்பதால் முதல் பாகத்தோடு நிறுத்தினேன்.
முதல் பாகத்தின் இறுதியில் இந்தக் கதையைப் படிக்க நேர்ந்த ‘வாசகர்களுக்கு’ நான் எழுதினேன்.
"இந்தத் தொடர்கதையை இருபத்தைந்து வாரங்களுக்கு எழுதுவதாய் நான் ஆனந்த விகடனில் ஒப்புக்கொண்டேன். அப்போது என் மனத்தில் இருந்த கதையே வேறு. அந்தக் கதையை வெளியே சொல்வதுகூட ஒரு அபத்தம் என்று இப்போது தோன்றுகிறது.
இந்த நாவலின் முதல் வரியை எழுதிய பிறகு அடுத்த வரியும், முதல் அத்தியாயத்தை எழுதியபிறகு அடுத்த அத்தியாயமுமாய் இதன் திசை எனக்குத் தெளிவுபட ஆரம்பித்தது. நான் ஒப்புக் கொண்டபடி இந்தக் கதையை முடிக்க முடியாததால் மேலும் சில வாரங்கள் எழுத விரும்பிய பொழுது பெருந்தன்மையோடு தனது சில பக்கங்களை எனக்கு ஒதுக்கிக் கொடுத்த ஆனந்த விகடனுக்கு எப்போதும்போல் என்றும் நான் நன்றி பாராட்டுகிறேன்.
என்னளவில் இந்தத் தொடர்கதை முடிவு பெறாததேயாகும். எனவேதான் இரண்டாவது பாகத்தை உடனடியாகத் தொடங்கும் உத்தேசமில்லாமலே இந்த முதற்பாகத்தை முடித்திருக்கிறேன். இப்போது எனக்கே ஓர் இடைவேளை தேவைப்படுவதே அதற்குக் காரணம்.
நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
கவர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆண் - பெண் உறவையும் பெண்ணின் உடலையும் வர்த்தகப் பொருள் ஆக்குகின்ற இன்றைய பெரும்பாலான ‘இலக்கிய உத்திகள்’ என்னை அறியாமலேயே -இந்த நாவலின் இயல்பு காரணமாகவே முற்றிலும் இதில் தவிர்க்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்தக் கதையை நான் மிகவும் ரசித்து எழுதினேன். இது எனக்கு ஒரு விசேஷமான அனுபவம். இதைப் பற்றி வாசகர்களின் அபிப்பிராயங்களையோ விமர்சகர்களின் கருத்துக்களையோ நான் சேகரிக்க முயன்றதில்லை. ஆனால் பிறரது அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் மதித்து நான் குறித்துக் கொள்கிறேன்.
இதன் அடுத்த பாகங்களை எழுத வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது. எதையும் செய்வதற்கு அது சம்பந்தப்பட்ட ஒரு மனிதனின் ஆசைமட்டும் போதாது.
வாழ்க்கையின் இருண்ட பகுதிகளையே காட்டுகிறவன், என்று என்னைப்பற்றி பாமரத்தனமான ஓர் இலக்கிய அபிப்பிராயம் இருக்கிறது. ஆனால் இந்தக் கதை, வாழ்க்கையின் ஒளி மிகுந்த பகுதிகளை மட்டுமே காட்டுகிறது. மனிதர்களின் பலவீனத்தையே, அழுத்தம் தந்து, ஆணி அறைந்து காட்டுவதை நான் எனது நோக்கமாகவோ செயலாகவோ எப்போதும் கொண்டிருந்ததில்லை. எளிமையும் அதே சமயம் உயர்வும் மிகுந்த மனிதப் பண்புகள் என்னை எப்போதும் வசீகரிக்கின்றன.
நான் அறிந்தவரை தமிழில், பரவலாக நாம் அறிந்திருக்கிற காதலும் ஸெக்ஸ_ம் இல்லாத முதல் நாவல் இது தான்
என்று ஒரு நண்பர் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. இதன் இரண்டாவது பாகமும் இப்படித்தான் அமையுமா என்று எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஏனெனில், அப்படிப்பட்ட நோக்கத்துடன் இது எழுதப்படவில்லை. எனினும் இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரை அது ஒரு உண்மைதான் என்பதை நான் எப்படி மறுக்க முடியும்! இந்த நாவலின் அல்லது தொடர்கதையின் இரண்டாம் பாகத்தை எழுதுவதெனின் நான் ஆனந்த விகடனிலேயே எழுதுவேன். இப்போது இந்த முதல் பாகத்தையே ஒரு முழு நாவலாகக் கருதி ஏற்றுக் கொள்ளுமாறு நான் வாசகர்களை வேண்டிக் கொள்கிறேன்."
அந்த எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இன்னும் முடியாத இந்தத் தொடர்கதையை எழுதவும் இடையில் நிறுத்திக் கொள்ளவும் அனுமதித்த ஆனந்தவிகடனின் பெருந்தன்மையும் என்மீது அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையும் மிகவும் மேலானவை. அவர்களுக்கும் இதைப் புத்தகமாக வெளியிடுகிற மீனாட்சி புத்தக நிலையத்தாருக்கும் நன்றி பாராட்டுகின்றேன்; மீண்டும் -
இரண்டாம் பதிப்பாக இவ்வளவு விரையில் வெளிவருகிற எனது முதல் புத்தகம் இதுதான். இந்த நாவலே முழுமையானதுதான். இதற்கொரு இரண்டாம் பாகம் போல் எனது நாவல் எதனையும் தொடர்ந்து எழுதலாம். எனவே, இதனைத் தொடர்ந்து வரும் நாவல் ‘ஒரு வீடு ஒரு உலகம்!’ என்ற தலைப்பில் வரும். இன்ஷா அல்லாஹ்!
த. ஜெயகாந்தன்
அத்தியாயம் ஒன்று
லாரியில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். பீடி குடித்துக் கொண்டிருக்கும் டிரைவர் துரைக்கண்ணுவுக்குப் பக்கத்தில் தேவராஜன் உட்கார்ந்திருந்தான். எப்பொழுதும்போல தனது தனித்துவத்தைக் காட்டிக் கொள்கிற தோரணையில் அவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் ‘அட்லஸ் ஷ்ரக்ட்’ என்று தலைப்பிட்ட புத்தகம் இருந்தது. அவன் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசதியோடும் வளத்தோடும் வாழ்கிறவன். கிராமத்துப் படிப்பாளி. அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் பி.டி. அஸிஸ்டண்டு. இந்த மனிதர்களோடு மனத்தால் எட்டாமல் இருக்க விரும்புகிறவன். லாரியின் இடது ஓரமாய்த் தொத்தி உட்கார்ந்திருந்த கிளீனர் பையன் பாண்டு, தேவராஜனுக்கும் தனக்குமிடையே உட்கார்ந்து உறங்கி விழுந்து கொண்டிருந்த கிழவரையும் வெளியே தெரியும் வேடிக்கைகளையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான். அரை நிஜாரும் அழுக்கு பனியனும் போட்டுக் கொண்டிருந்த பாண்டு, துரைக்கண்ணுவன் தயாரிப்பு; சீடன். லாரியின் பின்புறத்தில் மூவர் நின்று கொண்டிருந்தனர். அந்த மூவரும் இடுப்பு வேட்டியைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு கோவணத்துடன் இருந்தார்கள். இந்தப் பகுதியில் உள்ள கிராமத்து ஏழைகள் அநேகமாக அப்படித்தான் திரிகிறார்கள். இன்னும் சற்றுத் தூரம் சென்றால் மேலும் பலர் லாரியில் ஏறுவார்கள். பஸ்ஸ_க்கு என்ன சார்ஜோ அதே பணத்தை பாண்டு வசூலிப்பான். லாரி டிரைவர் துரைக்கண்ணு, பணத்திற்கு பாண்டுவிடம் கணக்குக் கேட்பானே தவிர, பங்கு கேட்க மாட்டான். ஆனால் பாண்டு தானாகப் போய் லாரிக்கு ஆள் சேர்த்தால் துரைக்கண்ணு கோபித்துக் கொள்வான்; சில சமயங்களில் பாண்டுவை அடித்துக்கூட விடுவான்.
டிரங்கு ரோட்டில் உள்ள ஆலம்பட்டிக்குப் பக்கத்துக் கிராமங்களிலிருந்து சரக்கு ஏற்றிவரும் லாரி அது எப்போதாவது தொலை தூரப் பயணம் போகும். வண்டி மிகவும் பழசாகிவிட்டதால் இப்பொழுது சில மாதங்களாகத் துரைக்கண்ணு அதை நம்பி எடுத்துக் கொண்டு வெளியூர்ப் பயணங்கள் போவதில்லை.
ஆலம்பட்டிலிருந்து கிழக்கே பிரிகிற மலைப் பாங்கான ரோடுகளில் இருபது மைல் தொலைவில் உள்ள கிராமங்களைச் சுற்றிக்கொண்டு குமாரபுரத்துக்குப் போய்சேரும் லாரி அது, ஆலம்பட்டி ரயில்வே ஸ்டேஷனுள்ள மிகச் சிறிய ஊர்தான் என்றாலும், இரண்டு டிரங்கு ரோடுகள் ஒன்றை ஒன்று குறுக்கிடுகிற ‘கூட்டு ரோடு’ ஜங்ஷனாக இருப்பதால் லாரிக்காரர்கள், கமிஷன் வியாபாரிகள், காய்கறி சப்ளை செய்யும் கிராமவாசிகள் முதலியோரின் நடமாட்டம் மிகுந்த ஏற்றுமதி இறக்குமதி ஸ்தலமாக அந்தப் பிரதேசத்திலேயே பிரபலமாகியிருந்தது. இரண்டு மூன்று டீக்கடைகளும், ஒரு ஓட்டலும், அதன் முன்னே வரிசையாக நிற்கும் லாரிகளும் எக்ஸ்பிரஸ் பஸ்களும் பெட்ரோல் பங்க்கும், பஸ் பிரயாணிகள் இறங்கிக் காலாறும் இடமாக இருப்பதால் சந்தடியும் அதை ஒரு பெரிய ஊரின் கடைத் தெரு மாதிரி ஆக்கியிருக்கிறது. மற்றபடி அந்த ஊரில் தெருக்களோ வீடுகளோ கூடக் கிடையாது.
காலையில் வண்டி நிறையக் காய்கறி மூட்டைகள், பூக்கூடைகள், வாழைத்தார்கள் லோடு ஏற்றிக் கொண்டு வரும்போது இந்த லாரிகளில் பிரயாணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த லாரியில் கிளீனர் பாண்டுவோடு வேறு யாராவது ஓரிரு வியாபாரிகளோ அல்லது கமிஷன் ஏஜெண்டுகளோ முன்பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள்.
துரைக்கண்ணு அவர்கள் யாரிடமும் அதிகம் பேசமாட்டான். பாண்டுதான் அவன் சார்பாக யாரிடமும் எதுவும் பேசுவான். அதைத் துரைக்கண்ணு கவனித்துக் கொண்டிருப்பான். ஆனால் பாண்டு தவறாகவோ, சரியில்லாமலோ, இவன் நினைக்காத மாதிரியிலோ ஏதாவது சொல்லிவிட்டால் மட்டும் எல்லார் முன்னிலையிலும் சத்தம் போட்டுக் கெட்டவார்த்தை சொல்லி அவனைத் திட்டுவான் துரைக்கண்ணு. பாண்டு அதனால் சிறிதும் பாதிக்கப்படாமல், ஆனால் மௌனமாகி, அவனைப் புரிந்துகொண்டு அவனுக்காகத் தொடர்ந்து பிறரிடம் பேசுவான். துரைக்கண்ணு எப்போதும் கோபமாயிருப்பது போல் தோன்றுவான். ஆனால் பாண்டுவோடு திரும்பி லாரியில் வரும்போது அவனிடம் அன்பாகப் பேசுவான். தமாஷ் பேசுவான். அப்போது பாண்டு மட்டும் தனியாக இருக்க வேண்டுமென்பதில்லை. இவன் கோபித்துக் கொள்ளும்போது கூட இருந்தவர்களைத் தவிரப் புதிய மனிதர்களின் கூட்டம் எவ்வளவு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பாண்டுவைச் சமாதானம் செய்வான் துரைக்கண்ணு.
ஆலம்பட்டிக்கும் குமாரபுரத்துக்கும் பதினைந்து மைல் இருக்கும். இடையில் பத்து மைலுக்கு மலைப் பாதை. மலை என்றால் பெரிய பெரிய மலைகளில் ஏறிப் போவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லாத படி இந்தப் பத்து மைல்களுக்குள்ளாகவே நான்கு ஹேர்பின் வளைவுகள் உண்டு. மலைப்பாதை முடிவடைகிற இடத்தில் கிருஷ்ணராஜபுரம் என்ற அழகான சிறிய கிராமம் இருக்கிறது. லாரியில் ஏற்றுகிற பெரும் பகுதி காய்கறிகளும், புஷ்பங்களும் கிருஷ்ணராஜபுரத்தில் இருந்துதான். அதற்கு அப்புறம் உள்ள ஐந்து மைல் தூரத்தைக் கடப்பதற்குள் பிரிந்து செல்லும் பாதைகளின் வழியே சென்று குறிஞ்சிக் குப்பம், மானகிரி, பூண்டியான் பட்டு போன்ற கிராமங்களைச் சுற்றிக் குமாரபுரம் வந்தடையப் பத்து மைல்களாகிவிடும்.
ஆலம்பட்டிக்கும் குமாரபுரத்துக்கும் இடையே நேரான பஸ் போக்குவரத்தும் உண்டு. ஆனால், ஒரு பஸ்ஸைவிட்டு விட்டால் பிறகு நான்கு மணி நேரம் காத்திருக்க நேரும். அப்போதெல்லாம் மக்கள் இந்த லாரிகளையே எதிர்பார்ப்பார்கள்.
ஐந்து மணி பஸ் போய்விட்டது. இனிமேல் கடைசி பஸ்தான். பாண்டு இன்றைக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தான். அவன் எதிர்பார்த்த அளவுக்குப் பிரயாணிகள் சேராததே அதற்குக் காரணம். துரைக்கண்ணு இன்றைக்கு மிகவும் குஷியாக இருந்தான். அதற்கு ஒரு காரணமும் இல்லை, அவன் முகம் கோபமாக இருந்தாலும், அவனுள்ளே எப்போதும் ஆனந்தமாகத்தான் இருக்கிறான். இரண்டுக்குமே காரணம் இல்லை. அவன் வாயில் பீடியோடு பாட்டுப் பாடிக்கொண்டே லாரியை ஓட்டினான்.
அவன் எப்போதும் ஏதாவது கற்பனையாகப் பாடுவான். சின்னக் குழந்தை மாதிரி வாயில் வந்ததை உளறுவான். அந்த உளறல்களைப் பாண்டுவிடம் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்தவான். பாட்டின் அடிகளையும் தன்கூடச் சேர்ந்து அவனையும் பாடச் சொல்லுவான். பாண்டு சில சமயத்தில் இந்த விளையாட்டில் கலந்து கொண்டு அவனோடு பாடுவான் அவன் உளறுகிற மாதிரியே சிரித்துக் கொண்டு அவனுக்காக உளறுவான்.
துரைக்கண்ணு இப்போது பாடுவது படித்துக் கொண்டிருந்த தேவராஜனுக்கு இடைஞ்சலாக இருந்தது; புத்தகத்தை மூடினான். திடீரெனப் பாட்டை நிறுத்திக் கொண்டு பாண்டுவிடம் தாழ்ந்த குரலில் கேட்டான் துரைக்கண்ணு:
பின்னாலே யாரும் பொம்பளைங்க இல்லையேடா?
பொம்பளையுமில்லை, ஆம்பளையுமில்லை நீங்க பாத்தீங்களே… அந்த மூணு பேருதான்.
ஏண்டா, அந்த மூணு பேர் ஆம்பளையில்லியா?
என்று சிரித்தான் துரைக்கண்ணு. சிரித்துவிட்டுத் தொடர்ந்து பாடினான். அவன் குரல் அவன் மீசையை விட முரட்டுத்தனமாயிருந்தது.
"குருவிக்காரியை வரச் சொல்லி
குளிக்கச் சொன்னான் குப்பன்
குருவிக்காரி குளிச்சு முழுவிக்
குடிசைக்குள்ளே போனாள் - அவ
குடிசைக்குள்ளே போனாள்…"
என்று துரைக்கண்ணு பாட, பாண்டு அதே ராகத்தில் பாட்டின் கடைசி அடியைக் கூடச்சேர்ந்து பாடினான்:
ஆமா – குடிசைக்குள்ளே போனாள்
"கொஞ்ச நேரம் ஆனதுக்கப்புறம்
குப்பன் குளிக்கப் போனான்…"
என்று பாடினான் துரைக்கண்ணு. பாண்டுவும் அந்த வரியை அவன் பாடி நிறுத்திய பிறகு தாளம் போட்டுக் கொண்டு பாடிச் சிரித்தான்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேவராஜன் ரகசியமாகப் பாட்டை ரசித்து வாய்க்குள் சிரித்துக் கொண்டான். துரைக்கண்ணு பாடிய ராகம் தன் பள்ளியில் குழந்தைகள் பாடுகிற ‘நர்ஸரி ரைம்’ மாதிரி… ‘குப் குப் குப் குப் ரயில் வண்டி’ மொட்டை ஞாபகப்படுத்தியது தேவராஜனுக்கு. அவன் சிரிப்பைக் கவனிக்காத துரைக்கண்ணு தொடர்ந்து பாடினான்:
"குருவிக்காரன் அங்கே வந்து
குய்யோ முறையோ என்றான்
குருவிக்காரி குளிச்சாலென்ன
குடியா முழுகிப் போகும்?"
என்று பாடி பாண்டுவிடம் திரும்பி சொல்லேண்டா…
என்று கத்தினான் துரைக்கண்ணு:
குடியா முழுகிப் போகும்?
பாண்டுவும் அதே ராகத்தில் கூடப் பாடினான்:
அட, குடியா முழுகிப் போகும்?
"குருவிக்காரியைக் குருவிக்காரன்
கூட்டிக் கொண்டு போனான்
கூட்டம் போட்டுப் பஞ்சாயத்தார்
குப்பனைக் கூப்பிட்டாங்க;
குருவிக்காரியைக் குடிசைக்குள்ளே
குப்பன் விட்டது தப்பாம்
குப்பனும் குளிச்சு விட்டதனாலே
குத்தம் உண்டோ ஐயா."
இப்போது தேவராஜன் வாய்விட்டே சிரித்தான்.
"இது என்னா பாட்டு? சினிமாவிலேயா? என்று தேவராஜன் கேட்டான்.
இதெல்லாம் நமக்குச் சொந்தப் பாட்டுத்தாங்க… நம்ப டீக்கடை குப்பன் இல்லே, அவன் முந்தா நாளு குருவிக்காரிச்சியை…
என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தான் துரைக்கண்ணு.
குருவிக்காரின்னா கொறத்திதானே?
என்று பாண்டு கேட்டான்.
இந்தப் பக்கமெல்லாம் எல்லாரையும் கொறத்தின்னு சொல்றாங்க. பட்டணம் பக்கமெல்லாம் என்னாடான்னா எல்லாரையுமே குருவிக்காரிச்சின்றாங்க. ஆனா குருவிக்காரி வேறே; கொறத்தி வேறே… என்னா பெரியவரே, இதெப்பத்தி நீங்க என்னா நெனைக்கிறீங்க?
என்று, இவன் பாட்டு சத்தத்தில் விழித்துக்கொண்ட கிழவரிடம் கேட்டான் துரைக்கண்ணு. அவர் கொஞ்சம் தீவிரமாக யோசித்தார்:
குறவர்னா - இந்த நரிக்குறவருங்க. குருவிக்காரங்க வேறே
என்று கிழவர் விளக்கம் தந்தார்.
லாரி திரும்பி மலைப்பாதையை நெருங்கிற்று.
‘மலைப்பாதை, பார்த்துச் செல்லவும்’ என்று அறிவிக்கிற பலகையின் அருகே நடந்து போய்க் கொண்டிருந்தான் ஒரு மனிதன். அவன் தன் பின்னால் லாரி வருகிற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்து நின்றான்.
அவ்வளவு தூரத்திலிருந்தே அந்த மனிதன் இந்தப் பிரதேசத்துக்குப் புதியவன் என்று தெரிந்தது. செம்மண் படிந்து வெளிறிய ரோஸ் நிறமாகிவிட்ட அவனுடைய பைஜாமாவின் பாத ஓரங்கள் கரிய அழுக்கேறி நைந்து தேய்ந்து இருந்தது. மலைக்காற்றில் தாறுமாறான அவனது சிகை விசிறிப் பறந்து நெற்றியில் கவிந்து பார்வையை மறைத்ததால் அவன் தலையை அண்ணாந்து கொண்டு இந்த லாரியைப் பார்த்தான். அவனது வெள்ளை ஜிப்பாவின் மேல் அநாவசியமாக ஒரு துணிப்பட்டையைக் கட்டிக் கொண்டிருந்தான். தோள் வழியே ஓர் ஆலிவ் நிற மிலிட்டரிக்கார ‘கிட்’ மூட்டைபோல் முதுகில் வழிந்து கிடந்தது. இடது கையால் அதைப் பிடித்துக் கொண்டு வலது கையில் புத்தம் புதிய லெதர் ஸ_ட்கேஸ் ஒன்றும் வைத்திருந்தான். காலில் மிக நைந்து போன ஹவாய்.
அவன் பஸ்ஸை நிறுத்துவதற்காகக் கையை ஆட்டவோ குரல் கொடுக்கவோ இல்லை. மலைப் பாதையை ரசித்துக் கொண்டு நடந்துபோகிற உல்லாசத்தில் ஒரு பறவையை ரசிக்கிற மாதிரி, மலைகளுக்குப் பின்னால் கவிந்து சுருண்டு எழுந்து பளபளத்து நிற்கிற வெள்ளிய மேகக்கூட்டத்தை கண்கள் இடுங்கப் பார்க்கிற மாதிரி, பின்னால் இரைச்சலிட்டுக் கொண்டு வருகிற இந்த லாரியையும் அவன் திரும்பி நின்று ரசித்தான். தனக்காக இந்த லாரி நிற்குமென்றோ நிற்க வேண்டுமென்றோ அவன் எதிர்பார்க்கவில்லை.
பாண்டு, துரைக்கண்ணுவிடம், ஒரு டிக்கெட் வருதுங்க
என்று கெஞ்சுவது மாதிரிச் சொன்னான். அப்போதுதான் தேவராஜன் அந்த மனிதனை அருகில் பார்த்தான். லாரி வேகம் குறைந்து அவன் பக்கத்தில் போய் மெதுவாக நின்றது. லாரி நின்றிருக்கும்போது ஓடுவதை விடவும் அதிகமாக இஞ்சின் சத்தம் பேரோசையாக அதிர்ந்தது. இடது ஓரமாய்த் தொத்தி உட்கார்ந்திருந்த பாண்டு குதித்துக் கீழே இறங்கினான்.
அந்த மனிதன், தனக்காக இந்த லாரி நின்றதையும் ஒருவன் இறங்கியதையும் பார்த்தவுடன் எதிர்பாராது கிடைத்த இந்த வசதிக்காக மகிழ்ந்து நன்றி தெரிவிக்கிற மாதிரிச் சிரித்தான்.
அப்போது அவர்கள் எல்லாருக்குமே அவன் ரொம்ப விசித்திரமாகத் தோன்றினான். அவனது கண்களின் நடு விழிகள் பழுப்பும் நீலமுமாக இருந்தன. ஆனால் அவனது நிறம் ஒன்றும் வெள்ளைக் காரர்களுடையது மாதிரி இல்லை. தேவராஜன்கூட அவனைவிட வெள்ளை நிறமாக இருந்தான். ஆனால் அவனது தலை முடி செம்பட்டையாயும் முழங்கையிலும் மணிக்கட்டிலும் அரும்பி இருந்தவை பொன் நிறமாகவும் இருந்தான். அவனது ரோமானிய மூக்கு இந்தப் பக்கத்து மனிதர்களிடம் காணமுடியாத ஒன்று. இவனிடம் தமிழில் பேசினால் புரியுமா? என்ற தயக்கத்துடன் பாண்டு, தேவராஜனிடம் திரும்பிச் சொன்னான்: நீங்கதான் கேளுங்களேங்க – எங்க போறார்னு.
தேவராஜன் கேட்பதற்கு முன்னாலே அந்த மனிதன் முந்திக் கொண்டான்: கிருஷ்ணராஜபுரத்துக்குப் போகணும்; பஸ் பூட்டுது. நெக்ஸ்ட் பஸ்… ராத்திரி ஆவுமாமே
என்று சொல்லிக் கொண்டே - இதற்கிடையில் லாரியிலிருந்து இறங்கி அவனருகே வந்து லாரியில் அவனை ஏற்றிக் கொள்ளச் சித்தமாகி இருக்கிற