Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

O Pakkangal
O Pakkangal
O Pakkangal
Ebook407 pages2 hours

O Pakkangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateAug 30, 2017
O Pakkangal

Read more from Gnani

Related to O Pakkangal

Related ebooks

Reviews for O Pakkangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    O Pakkangal - Gnani

    http://www.pustaka.co.in

    ஓ பக்கங்கள்

    O Pakkangal

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வணக்கம்

    தமிழ்ப் பத்திரிகைகளில் நான் சுமார் 35 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் இன்று முக்கியமான முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் 25 வருடங்களுக்கு மேல் எழுதி வருபவர்.

    இந்த மாதம் வெளியான அவருடைய 'சாட்சி மொழி' என்ற அரசியல் கட்டுரைகள் தொகுப்பை அவர் எனக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

    ஏன் எனக்கு சமர்ப்பணம் செய்தார்?

    அவர் எழுதுகிறார்: "தமிழில் நான் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள முடியாத தரப்பை முன்வைப்பவர் ஞாநி. அரசியல் கருத்துக்களில் ஒரு வகையான படபடப்பும் அவசரமும் அவரிடமுள்ளன, வரலாற்று விரிவில் வைத்து பார்க்கும் நோக்கு குறைவு என்பது என் மதிப்பீடு. ஆனால் அவரது நேர்மையும் துணிச்சலும் என்னை எப்போதுமே கவர்பவை. அவர் ஒரு தனிநபர் இயக்கம்.

    அவர் குமுதம் இதழில் நாடகம் குறித்து எழுதிய 'ருத்ராட்சப்பூனைகளே...' என்ற கட்டுரையை என் பன்னிரண்டு வயதில் நான் வாசித்தேன். அந்த இதழ் பக்கமும் அவரது புகைப்படமும்கூட இன்னமும் நினைவில் இருக்கின்றன. அன்றுமுதல் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக அவரை தொடர்ந்து கூர்ந்து வாசித்து வருகிறேன். நான் அவரது ஆராதகன் என்று சொல்ல தயக்கமில்லை.

    ஞாநிக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன். வாசித்துவிட்டு அவர் எதிர்க்க நிறைய இருக்கிறது இதில்."

    என்ன விசித்திரம் பாருங்கள். என் அரசியல் கருத்துகள் படபடப்பும் அவசரமும் உள்ளவையாம். எனக்கு வரலாற்று விரிவில் வைத்துப் பார்க்கும் நோக்கு குறைவாம். பெரும்பாலும் அவர் ஒத்துக் கொள்ளமுடியாத தரப்பை முன்வைப்பவனான் நான். அவர் சமர்ப்பித்த நூலிலும் எனக்கு எதிர்க்க நிறைய இருக்கிறதாம். ஆனாலும் அவர் என் ஆராதகனாம்.

    ஏன் ஆராதிக்கிறார்? அவருடைய அரசியல் கட்டுரைத் தொகுதியை ஏன் எனக்கு சமர்ப்பிக்கிறார்? ஜெயமோகன் சொல்கிறார் : (ஞாநியின்) நேர்மையும் துணிச்சலும் என்னை எப்போதுமே கவர்பவை. (ஞாநி) ஒரு தனிநபர் இயக்கம்.

    நல்லது. என் கருத்துகளுடன் உடன்படாத பலரும் இதைச் சொல்கிறார்கள். நேர்மை... துணிச்சல்...

    ஜெயமோகனின் சமர்ப்பணத்தைப் படித்தது முதல் என்னைக் குடையும் கேள்வி இதுதான்: ஒரு மனிதன் நேர்மையாக இருக்க முயற்சிப்பதும் துணிவோடு இயங்குவதும், பாராட்டுக்கும் ஆராதனைக்கும் சமர்ப்பணத்துக்கும் உரியதாக நம் சமூகத்தில் ஆகிவிட்டதா?

    இதுதானே மனிதர்களின் இயல்பாக எப்போதும் இருக்க வேண்டும்? நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சமூகம் சார்ந்து செய்யும் செயல்பாடுகளிலும் சரி, நேர்மையும் துணிச்சலும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ நேர்ந்தால், ஓ, அது எவ்வளவு துயரமானது! அந்தத் துயரமே இன்று நமக்கு இயல்பானதாகிவிட்டதா?

    அப்படி ஆகியிருந்தால், அதிலிருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்ளவேண்டாமா? தினசரி படுக்கையில் விழுந்து உறங்கப் போகும் முன்பு அன்றைய தினத்தில் நான் என்னவாக இருந்தேன் என்பது பற்றிய மனசாட்சியின் உறுத்தல் இல்லாமல் நிம்மதியாக உறங்க வேண்டாமா? நம்மால் பிறர்க்கு வலியும், பிறரால் நமக்கு வலியும் இல்லாத ஒரு ஜீவிதம்தானே நம் கனவு? அதை நோக்கி அங்குலம் அங்குலமாகவேனும் நகர்ந்து செல்ல நேர்மையும் துணிச்சலும் மட்டும்தானே நமக்கு உதவ முடியும்?

    வாழ்க்கையில் 'வெற்றி' பெற நேர்மையைக் கைவிட்டுவிடு. உண்மையை அஞ் சாமல் சொல்லும் துணிச்சல் தேவையில்லை. அது பிழைப்புக்கு உதவாது. இந்தப் பாடங்களும் பார்வைகளும் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அசைவிலும் வலியுறுத்தப்படும் சூழலில் நாம் வாழ்கிறோம் என்பது கசப்பான உண்மை.

    இதிலிருந்து நம்மால் மீளமுடியும்; இந்த சூழலை நாம் மாற்றமுடியும் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அப்படி நம்மை மீட்கும் தேவதூதர் எங்கிருந்தோ வரப்போவதில்லை. நம்மிடமிருந்தே, நமக்குள்ளிருந்தேதான் அது நடக்கும்.

    அதற்கு உதவக்கூடிய சிறு கருவிகளாகவே நான் எழுத்தாளனையும் எழுத்தையும் பார்க்கிறேன். என்னைச் சுற்றி அரசியலிலும், சமூகத்திலும் பல தளங்களில் பரபரப்பாக அவசரத்தோடும் படபடப்போடும் நடக்கும் நிகழ்வுகளை விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்கிறேன். (நான் படபடப்பாகவோ அவசரமாகவோ இல்லை.) விரிந்த வரலாற்றுப் பார்வையில் எதை நான் பார்த்தாலும், அவற்றில் ஊடாடும் அடிப்படை மனித மதிப்பீடுகளே எனக்கு முக்கியமானவையாகவும் ஆதாரமானவையாகவும் தோன்றுகின்றன... அந்த மதிப்பீடுகளை அளவுகோலாகக் கொண்டு சம கால பரபரப்பை அளப்பதும் தாண்டிச் செல்வதுமே என் விமர்சனம்.

    இந்தப் பயணத்தில் ஏராளமான வாசகர்கள் என்னுடைய சில கருத்துகளில் முரண்பட்டாலும் உடன்பட்டாலும் ஒரு புள்ளியில் என்னோடு முற்றாக இணைகிறார்கள். நேர்மையும் துணிச்சலும் இயல்பான ஒரு மனித வாழ்க்கையில்தான் நேசமும் சமத்துவமும் தழைக்க முடியும் என்ற புரிதல் அது.

    இதை என்னோடு பேச நேரும், சந்திக்க நேரும் ஒவ்வொரு வாசகரும் வெவ்வேறு சொற்களில் என்னிடம் சொல்லிச் செல்கிறார்கள். இந்தப் பகிர்தல் தரும் உற்சாகமே, என்னை என் தனிப்பட்ட உடல் மன உபாதைகளைக் கடந்து தொடர்ந்து இயங்க வைக்கிறது.

    ஏப்ரல் 2005ல் எழுதத்தொடங்கி 200 கட்டுரைகளைக் கடந்துவிட்ட 'ஓ' பக்கங்களுக்கு இது ஐந்தாவது தொகுப்பு. தமிழில் பல லட்சம் பிரதிகள் விற்கிற பத்திரிகைகளின் வழியே எண்ணற்ற வாசகர்களைச் சென்றடைவது எளிதாகவும், ஓராயிரம் பிரதிகள் மட்டுமே விற்கும் முதல் பதிப்பாக ஒரு நூலை வெளியிடுவதுதான் சிரமமானதாகவும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஆகியிருப்பது தமிழ்ச் சூழலின் விசித்திரங்களில் ஒன்று.

    முதல் இரு தொகுப்புகளை விகடன் பிரசுரமும், மூன்றாவதை கிழக்கு பதிப்பகமும் நான்காவதை குமுதம் வெளியீடும் வெளியிட்டுள்ளன. இதை என்னுடைய ஞானபாநு பதிப்பகம் வழியே வெளியிடுகிறேன்.

    ஓர் எழுத்தாளனின் படைப்பை இன்னொரு பதிப்பகம் வெளியிட்டால், அவனுக்கு அதிகபட்சம் நூல் விலையில் பத்து சதவிகிதம் ராயல்டியாகக் கிடைக்கும். சிலர் ராயல்டியே கொடுப்பதுமில்லை. அவனே முதலீடு செய்து வெளியிட்டு மற்றவர்கள் மூலம் விற்பனை செய்தால் 25 சதவிகிதம் வரை கிடைக்கும். மற்றவர்கள் வெளியிடுவதை இவன் வாங்கி விற்றால் 30 சதவிகிதம் வரை பெறலாம். இதுதான் தமிழ்ச் சூழல். இரண்டாவது வழியை இப்போதைக்கு மேற்கொண்டிருக்கிறேன்.

    தொடர்ந்து உங்கள் ஆதரவினால் இயங்கிவரும் 'ஓ' பக்கங்கள் எழுதத் தேவையற்ற காலம் உருவானால் உங்களை விட நான் பெரிதும் மகிழ்வேன்.

    இந்தத் தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளை வெளியிட்ட முமுதம் ஆசிரியர் குழுவினருக்கும், இந்த நூல் தயாரிப்பில் எனக்குப் பெரும் உதவிகள் செய்த என் நண்பர்கள் பத்மா, வெங்கடேசன், பாலமுருகன் ஆகியோருக்கும் நூல் விநியோகத்தில் எனக்கு உதவும் கிழக்கு பதிப்பகத்துக்கும் என் நன்றி.

    ஒரு மழை நாள் மாலையில்

    அன்புடன்

    ஞாநி

    டிசம்பர் 2009

    சமர்ப்பணம்

    படித்தவர்கள் ஒவ்வொருவரும் எப்படி தமது சமூகப் பொறுப்பைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த அ.கி.வேங்கடசுப்பிரமணியன் இன்னமும் வாழ்ந்துவரும் ச.சீ.கண்ணன் ஆகிய இரு ஆதர்சங்களுக்கும் இந்த நூல் காணிக்கை.

    பொருளடக்கம்

    1. அமெரிக்காவின் அகதிகள்

    2. முடிஞ்சா பதில் சொல்லுங்க...

    3. ஓரணியில் குஷ்புவும் அன்புமணியும்

    4. ராமேஸ்வரம் வேண்டாம்... டெல்லி சலோ!

    5. மெய்யான மனிதச் சங்கிலி

    6. பயங்கரவாதத்தின் நிறம் காவி!

    7. அமெரிக்காவின் மூன்றாவது அணி!

    8. ஓ...பாமா!

    9. மனசாட்சியுடன் ஓர் உரையாடல் அல்லது ரத்தம் ஒரே நிறம். ஜாதி?

    10. பிரியங்கா, அஞ்சு, சுனில், யோநாதன், ஓமர் கற்பிப்பது என்ன?

    11. உள்ளூர் பயங்கரவாதம்

    12. பயங்கரவாதிகளை அத்வானி ஒப்படைப்பாரா?

    13. மரண அரசியல்

    14. மும்பை மேரி ஜான்...

    15. மனம் விரும்புதே...

    16. இது விளையாட்டு அல்ல...

    17. கசக்கும் பொங்கல்

    18. நான்கு பரிமாணங்கள்ஒரு மனிதர் ஒரு குடும்பம் ஒரு இனம் ஒரு தலைவர்

    19. 1.கலைஞரே, இலங்கைக்குப் புறப்படுங்கள்... 2.சில நேரங்களில் சில விருதுகள்

    20. நாகேஷ்!

    21. தமிழர் நலம் பெற விரைந்து வாருங்கள்...

    22. ஆ...ஸ்கர்!

    23. ரஹ்மானிடம் கற்றுக் கொள்வோம்!

    24. வக்கீல்கள்; பெண்கள்; மருத்துவமனைகள்...

    25. காந்தி கண்ணாடி, காந்தி கணக்குகள்...

    26. 67 வயது சாதனையும் 55 வயதுக் கனவும்

    27. பிச்சைப்பாத்திரம் ஏந்தி வரும் பண முதலைகள்...

    28. லஞ்சம் கொடுத்து ஓட்டு கேட்பது ஏன் தெரியுமா?

    29. ஓட்டு போடாம வூட்லயே இருந்துடலாமா?

    30. சிங்கப்பூரில் பெருச்சாளிகள்

    31. ஒரு நல்லநாடகமும் பல அருவெறுப்பான நாடகங்களும்

    32. ஓ போடு...

    33. மார்க் வாங்கும் மெஷின்கள்

    34. தேர்தல் தெரிவிக்கும் பாடங்கள்

    35. கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும்

    36. ஒரு அட்மிஷன்; ஒரு பிரமோஷன்

    37. பசங்க, பெரியவங்க

    38. ஒரு அராஜக தடை; ஒரு விசித்திரத் தீர்ப்பு

    39. ஏழைகளின் எதிரிகள் யார்?

    40. மக்கள் மன்றத்தின் கேள்விகள்

    41. பளிச்சுனு பத்து விஷயம்...

    42. கத்தியின்றி ரத்தமின்றி...

    43. மூன்று எரிச்சல்கள்

    44. மூன்று கவன ஈர்ப்பு செய்திகள்

    45. இருபதாண்டு காலக் கனவு

    46. 1. பச்சை முகமூடி 2. ஒழுக்க முகமூடி.

    47. வி.ஐ.பி. முதல் வி.ஐ.பி வரை

    48. கந்தசாமி & நொந்தசாமி

    49. கருணைக் கொலை: ஆளுக்கொரு நீதி

    50. ஆறு மனமே ஆறு

    1. அமெரிக்காவின் அகதிகள்

    எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள்.

    எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும்.

    எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.

    கடந்த 18 வருடங்களாக, இந்திய முதலாளிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் உலக முதலாளிகளின் டேப் ரிகார்டர்களாக இங்கே ஒப்பித்துக் கொண்டிருக்கும் வாசகங்கள் இவை. சோஷலிசத்தின் பெயரால் பொருளாதாரத்தை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்து இந்தியாவைக் குட்டிச் சுவராக்கியவர் நேரு என்று அவரை ஓயாமல் இன்னமும் வசை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட தத்துவங்களின் ஊற்றுக்கண்ணாகிய அமெரிக்காவில் இன்று புஷ் அரசாங்கம் தனியாரிடம் மார்க்கெட்டை விட்டது தப்பு; தன் மூக்கை நுழைத்தே ஆகவேண்டும் என்ற நிலையை எடுத்திருக்கிறது. காரணம் லெஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதுதான்.

    அமெரிக்க அரசாங்கம் தன் மக்கள் வரிப் பணமான சுமார் 900 பில்லியன் டாலர்களைக் (சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைக்) கொடுத்து இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தேசத்தையும் உலகத்தையும் மீட்க முயற்சித்திருக்கிறது. இராக், ஆப்கன் யுத்த செலவு மட்டும் 300 பில்லியன் டாலர் (12 ஆயிரம் கோடி ரூபாய்). வருடந்தோறும் மொத்தமாக அமெரிக்காவில் மக்களிடம் வரி வசூல் தொகை: 3600 பில்லியன் டாலர் (144 ஆயிரம் கோடி ரூபாய்கள்)

    லெஹ்மன் பிரதர்ஸ் மட்டுமல்ல, இதற்கு முன்பு ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் கம்பெனிகள். அடுத்து அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி). எல்லாமே நிதி நிறுவனங்கள். பழைய தமிழில் லேவாதேவிகள். வட்டிக் கடைக்காரர்கள்.

    லெஹ்மன் பிரதர்ஸ் அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதி நிறுவனம். இதற்குத்திரும்பி வராத கடன் மட்டும் 60 பில்லியன் டாலர். (240 கோடி ரூபாய்.) மெரில் லிஞ்ச் கம்பெனியின் கடன் 40 பில்லியன் (160 கோடி ரூபாய்).

    இவர்களெல்லாம் முழுகும்போது கூடவே இவற்றில் முதலீடு செய்தவர்கள், இவர்களுடன் வர்த்தகம் செய்தவர்கள் எல்லாரும் சேர்ந்து தர்ம அடி வாங்குகிறார்கள். இந்தியாவில் சத்யம், விப்ரோ,டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் முதலிய ஐ.டி கம்பெனிகளும், ஐசிஐசிஐ போன்ற வங்கிகளும் ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் அடி வாங்குகிறார்கள்.

    ஏன் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகின்றன என்பதை விவரித்தால் பொருளாதார வகுப்பு நடத்துவது போலாகிவிடும்; ஏனென்றால் ஒரு நிறுவனம் கடன் கொடுக்கும்; அப்படி கடன் கொடுத்ததையே தன் முதலீடாகவோ சொத்தாகவோக் காட்டி இன்னொரு கம்பெனியிடம் கடன் வாங்கும். இந்தக் கடன்களையே தன் பங்குகளாகக் காட்டி அவற்றை விற்க முற்படும். இப்படி இடியாப்ப சிக்கலாக நிறைய வழிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

    எளிமைப்படுத்திச் சுருக்கமாக சொல்வதானால், கடனைத் திருப்பித் தர முடியாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்ததால் திவாலானார்கள். இவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்கும்போது திவால் நோட்டீஸ் கொடுத்தார்கள்.

    இப்படி அடுத்தடுத்து நிதி நிறுவனங்கள் திவாலாகும்போது அதை அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், தொடர் சங்கிலியாக பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாகிவிடும். எனவே அரசு தலையிட்டுக் காப்பாற்றியாகவேண்டும் என்று புஷ் அரசு அவசர அவசரமாக பணத்தை அள்ளி கொடுக்கிறது.

    இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டால், விலை வாசி உயர்ந்தால், உடனே மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் வழக்கமாக சொல்லும் சாக்கு- இது உலகளாவிய பிரச்சினை. அதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம். உலகப் பொருளாதாரத்துடன் இந்தியப் பொருளாதாரம் இணைக்கப்பட்டுவிட்டதால் நாம் படுவேகமாக வளர்ந்து வருகிறோம். அதே போல பாதிப்புகளும் தவிர்க்க முடியாதவை என்பார்கள்.

    ஆனால் இப்போது லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி நம்மை பெரிதாக பாதிக்கவில்லை என்றும் இதே பொருளாதார மேதைகள் சொல்கிறார்கள். ஏன் பாதிக்கவில்லை? நம்முடைய ரிசர்வ் வங்கியின் மூலம் நாம் பின்பற்றி வரும் கட்டுப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்பதால் நமது வங்கிகளுக்கு கம்பெனிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லையாம். அரசின் ரிசர்வ் வங்கி மூலம் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்பது நேரு காலத்துக் கோட்பாடுதான்!

    இதற்கு முன்பு இங்கேயும் நிதி நிறுவனங்களும் சீட்டு கம்பெனிகளும் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாமல் இயங்கியபோது எப்படி திவாலாகி பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனவோ, அதே போல மிகப்பெரிய அளவில் இப்போது அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

    அமெரிக்க திவாலுக்கு அடிப்படை என்ன? கடன் வாங்கியவர்கள் கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டவில்லை என்பதுதான்.

    யார் இவர்கள்? ஏன் கடனைத் திருப்பிக் கட்டவில்லை? அல்லது கட்ட முடியவில்லை?

    அமெரிக்காதான் பூலோக சொர்க்கமாயிற்றே. அங்கே எல்லாருமே பணக்காரர்கள்தானே. கடனே வாங்கத் தேவையில்லாதவர்கள் என்றுதானே இங்கே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? சரி. அப்படியே வாங்கினாலும் திரும்பச் செலுத்தும் சக்தி இல்லாதவர்கள் கூட அங்கே உண்டா என்ன? அல்லது சக்தி இருந்தும் வேண்டுமென்றே திருப்பித் தராமல் மோசடி செய்கிறார்களா? என்னதான் நடக்கிறது பூலோக சொர்க்கத்தில்?

    இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென்று வந்தது அல்ல. ஐந்தாறு வருடங்களாகவே மெல்ல மெல்ல முற்றி வருகிறது. அடிப்படைக் காரணம் - வீடு வாங்கக் கடன் கொடுக்கும் திட்டம்தான். ஹவுசிங் லோன்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்டன.

    கடன் தவணையை ஒழுங்காகக் கட்டாதவர்கள், கட்டமுடியாதவர்கள் எல்லாருக்கும் கொடுத்ததால், வட்டிக்கடைக்காரர்கள் மட்டும் திவாலாகவில்லை. கடனில் வீட்டை வாங்கி அதில் குடியிருந்தவர்கள், வாடகைக்கு இருந்தவர்கள் எல்லாரும் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்.

    இன்றைக்கு அமெரிக்காவிலேயே அமெரிக்கர்கள் பலர் அகதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும், ஊருக்கு வெளியில் கூடாரக் குடியிருப்புகள் முளைக்கின்றன. சென்னையில் கூவம் ஓரமாகவும், பெரிய சாலைகளில் நடைபாதைகளில் பெரிய மதில் சுவர்களின் ஓரமாகவும் குடிசை போட்டு வசிப்பவர்களைப் போல, அமெரிக்காவிலும் ஊருக்கு வெளியே திறந்த வெளிகளில் டென்ட் போட்டு வசிப்போர் இப்போது அதிகரித்து வருகிறார்கள். சொந்த ஊரிலேயே அகதிகளானவர்கள் இவர்கள்.

    இரு அறை கொண்ட ஒரு வீட்டுக்கான வாடகை சுமார் 1120 டாலர். வருமானம் 45 ஆயிரம் டாலராவது இருந்தால்தான் இந்த அளவுக்கு வாடகை தரமுடியும். ஆனால் பல நகரங்களில் ஒருவரின் சராசரி வருமானம் 30, 35 ஆயிரம் டாலர்தான்.

    தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. அப்படி ஜகத்தினை அழிக்கும்போது, அதில் இருக்கும் அமெரிக்காவை மட்டும் பாவம் அழிக்கக்கூடாது என்றார் ஒரு நண்பர். ஏன் என்றேன். அங்கேதான் உணவில்லாத தனி ஒருவன் கூடக் கிடையாதே என்றார் நண்பர்.

    குறைந்தது மூன்று கோடி 50 லட்சம் பேர் தினசரி உணவு சரியாகக் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள் என்று அவருக்குச் சொன்னேன். இவர்களுக்கு உணவு தருவதற்காக பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கும் கணக்கின்படி வருடத்துக்கு 2 கோடி பவுண்ட் உணவுப் பொருட்களை நன்கொடையாகத் திரட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பணக்கார அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 96 கோடி பவுண்ட் உணவுப்பொருட்களை வீணடிக்கிறார்கள் என்றும் தொண்டு அமைப்புகள் வருத்தப்படுகின்றன.

    வாரத்துக்கு 40 மணி நேர வேலை. மணிக்கு 10 டாலர் சம்பளம் என்ற குறைந்த பட்ச ஊதியமும் வேலையும் கிடைக்காத அமெரிக்கர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கடினமாக இருக்கின்றன.

    அதனால்தான் இந்தியாவுக்கு ஒரு அணு உலையை விற்றால் 3 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க அரசு கணக்கிடுகிறது. உலகத்தில் எங்கேயாவது யுத்தம், சண்டை நடந்துகொண்டே இருந்தால்தான், அமெரிக்கப் பொருளாதாரம் பிழைக்க முடியும். இரு தரப்புக்கும் ஆயுதம் விற்கலாம்.

    சிங்களவர்களும் ஈழத்தமிழர்களும் சமரசத்துக்கு வந்துவிட்டால் இழப்பு அமெரிக்காவுக்குத்தான். இரு தரப்பும் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளும் நேசமாகிவிட்டால், பேரிழப்பு அமெரிக்காவுக்குத்தான்.

    உலகத்தில் வருடந்தோறும் விற்கப்படும் துப்பாக்கிகள், கிரெனேடுகள், ராக்கெட் ஏவுகணைகள் முதலியவற்றால் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் சாகிறார்கள். விற்பனைத்தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய்!

    அமெரிக்க நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவே திவாலானால் கூட உலகத்துக்கு ஒரு இழப்பும் இல்லை. உலகம் திவாலாக திவாலாக அமெரிக்காவுக்குத்தான் லாபம். அதனால்தான் உலகெங்கும் அரசியலிலும் மீடியாவிலும் தன் ஏஜண்ட்டுகளை நட்டு வைத்திருக்கிறது.

    அந்த ஏஜண்ட்டுகள் உச்சரித்துக் கொண்டிருக்கும் மந்திரங்கள்தான்: எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.

    அந்த வரிசையில் புஷ் உருவாக்கியிருக்கும் புதிய மந்திரம்: ஒவ்வொரு தொழிலிலும் லாபம் வரும்போது அது தனியாருக்கு; நஷ்டம் வரும்போது அது அரசுக்கு.

    பூச்செண்டு:

    மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜனுக்கு. கூட்டணி முயற்சியில் விஜய்காந்த்தை சென்று சந்தித்துப் பேசியதற்காக இ.வா.பூ. (தமிழ்நாட்டிலும் மூன்றாவது அணி முயற்சியை கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொண்டிருப்பதற்காக.)

    குட்டு:

    காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவுகள், பொருளாதாரக் குற்றப் புலனாய்வு, திரைப்படப் பைரசிப் புலனாய்வு, க்யூ பிரிவு, போதைப்பொருள் புலனாய்வு பிரிவு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறை ஆகியவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்திலிருந்து விலக்கு அளித்து மக்களை தகவல் அறியவிடாமல் தடுத்து உத்தரவு போட்டிருக்கும் தமிழக அரசுக்கு இ.வா.குட்டு.

    உளறல்:

    நடிகர் வடிவேலுவுடையது. அவருக்கும் விஜய்காந்த்துக்கும் தனிப்பட்ட தகராறு வந்தால் அதற்காக இவரும் தேர்தலில் குதித்து அவருக்கு எதிரா போட்டி போட்டு நம்மையெல்லாம் வம்புக்கு இழுப்பாராம். அய்யா. எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?

    23.9.2008

    2. முடிஞ்சா பதில் சொல்லுங்க...

    மாறன் பிரதர்சுக்கு:

    உங்க சன்.டி.வி தயாரிச்ச நாக்கமூக்கா நான்சென்ஸை மதுரையில ரிலீசாக வுடாம, உங்க பங்காளி அழகிரி மிரட்டித் தடுத்துட்டாருன்னு புலம்பிகிட்டே இருக்கீங்களே. அவுரு அப்பிடி செஞ்சிருந்தார்னா அது எப்பிடி தப்பாவும்? குடும்பக் கலாசாரத்தைத்தானே அவரும் பின்பற்றினதா அர்த்தம்?

    உங்கப்பா சொன்னதைக் கேக்காம, எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு உங்க தாத்தா துரத்தினாரே, அந்த 1972 சமயத்துல, உலகம் சுற்றும் வாலிபன்னு ஒரு படத்தை எம்.ஜி. ஆர் எடுத்து வுட்டாரு. அப்பலாம் நீங்க ஸ்கூல்ல இருந்திருப்பீங்க. ஸ்டாலின் மாணவர் அணியில இருந்தார். அழகிரி என்ன பண்ணிகிட்டிருந்தார்னு தெரியல.

    உங்க தாத்தாவோட பல கைத்தடிகள்ல ஒருத்தர் மதுரை முத்து. அவுரு மதுரையில படம் ரிலீசானா நான் புடவை கட்டி வளையல் போட்டுக்கறேன்னு சவால் எல்லாம் விட்டாரு. தமிழ்நாடு பூரா படத்துக்கு போஸ்டர் ஒட்ட விடல; பல தியேட்டர்காரங்களையும் விநியோகஸ்தர்களையும் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாதுன்னு உங்க தாத்தா ஆளுங்க மிரட்டிக் கெடுபிடிசெய்யறாங்கனு, அவரோட 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர் அப்ப குற்றஞ்சாட்டினாரு. ஆனா அவர் படம் ரிலீசாகி ஓஹோன்னு எல்லா ஊர்லயும் ஓடிச்சு.

    அழகிரியும் மதுரை முத்து இல்ல; நீங்களும் எம்.ஜி.ஆர்.இல்ல அதான் இப்ப உங்க பிரச்சினை.

    தம்பி தயாநிதி மத்திய மந்திரியா இருந்தப்ப, ராஜ் டி.வியில செய்தி ஒளிபரப்பக் கூடாதுன்னு அவர் இலாகாதானே நிறுத்திச்சு? காரணம் கேட்டப்ப, சில லட்ச ரூபா பெறுமானம் உடைய லைசன்ஸ் தொகையை அந்த டி.வி தாமதமா கட்டினாங்க; அதனால் லைசன்சே ரத்துன்னு சொல்லிட்டீங்க. அதே சமயத்துல அரசாங்கத்தை 500 கோடி ரூபாய் ஏமாத்தி, அதுக்காக கோர்ட்டுல 150 கோடி ரூபாய் அபராதம் கட்டற தண்டனை வாங்கின ரிலையன்ஸ் கம்பெனியோட செல் போன் லைசன்ஸை ரத்து பண்ணுவீங்களான்னு நிருபர்கள் கேட்டாங்க. இதுக்கெல்லாம் போய் லைசன்ஸை ரத்து செய்ய முடியாதுன்னு தம்பி சொன்னது ஞாபகம் இருக்குங்களா?

    தேர்தல் முடிஞ்சப்பறமும் விஜய் டி.வியில 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சி வெற்றிகரமா நடந்துகிட்டிருந்தப்ப, ஸ்டார் டி.வி அதிகாரிகளைக் கூப்பிட்டு, 'ஒண்ணு இதை ஸ்டாப் பண்ணுங்க; இல்லாட்டி மொத்தமா ஸ்டாரையே மூடிடுவோம்னு' தம்பியோட அமைச்சகத்துலருந்து சொன்னது யார்ன்னு ஞாபகம் இருக்குங்களா?

    அரசியல்ல இதெல்லாம் சகஜம் இல்லீங்களா? அதுவும் குடும்ப அரசியல்ல? அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.

    ஒரு யோசனை சொல்றேன். மத்தவங்க எடுக்கற படத்தைலாம் சன் டிவி வாங்குது இல்லே? சன் டி.வி எடுக்கற படத்தை மட்டும் ஜெயா டி.விக்கு வித்துடுங்க. அவங்க அதை, மதுரைக்கு மட்டும், இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, திரைக்கு வரவே முடியாத படத்தை டி.வியில காட்டி சாதனை பண்ணிடுவாங்க. அழகிரியால அதை நிறுத்த முடியாது இல்லீங்களா?

    தபால் மந்திரி ராஜாவுக்கு:

    இந்தத் தபால் உங்களுக்குக் கிடைக்கும்னு நம்பறேன். ஏன்னா இதை தபால் பெட்டியில போடல.

    நீங்க தகவல் தொழில்நுட்ப மந்திரி மட்டும் இல்ல. தபால் மந்திரியும்தான்னு ஞாபகம் வெச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்.

    தபால் துறைக்கு புதுசா ஏதோ சின்னம் வரைஞ்சு இருக்காங்க போல்ருக்கு. இப்பலாம் அரசியல் கட்சிக்கே சின்னம் சொந்தம் கெடையாதுன்னு தேர்தல் கமிஷனும் கோர்ட்டும் சொல்லிட்டாங்க. அந்த மாதிரி தபால் துறைக்கும் சொல்லிடப் போறாங்க. சட்டத் துறையிலே ஆலோசனை கேட்டு வெச்சுக்குங்க.

    ஏன்னா இந்த சின்னம் மாத்தறதை பொது மக்களுக்கு சொல்றதுக்காக கோடிக்கணக்கான ரூபா செலவு பண்ணியிருக்கீங்க போலருக்குது. ஒரு இங்கிலிஷ் பேப்பர்ல பார்த்தேன். முதல்ல ஒரு அரை பக்கம். அப்பறம் இன்னொரு அரை பக்கம். அதுக்கப்பறம் ஒரு முழு பக்கம். எல்லாம் ஒரே நாள்ல. சின்னம் மாறிடுச்சுன்னு மட்டும் சொல்றதுக்கு இத்தினி வெளம்பரம். ஒரே பேப்பருக்கு லட்சக் கணக்கான ரூபாய் வருமானம்.

    இத்தினி செலவு பண்ணதுல, அதுல கலைஞர் போட்டோவை சேத்து போட்டிருக்கலாம். கூட மன்மோகன், சோனியா போட்டோவையும் குட்டியா வெச்சுட்டா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களே. தம்பிக்குக் கடிதம் எழுதறதுக்காக, உங்க

    Enjoying the preview?
    Page 1 of 1