Justice Jaganathan
By Devan
()
About this ebook
தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது. 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மகத்தான வரவேற்பைப் பெற்றது.
Read more from Devan
Thuppariyum Sambu Rating: 0 out of 5 stars0 ratingsJhangiri Sundaram Rating: 0 out of 5 stars0 ratingsManitha Subavam Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Kadatcham Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsSriman Sudarsanam Rating: 1 out of 5 stars1/5Miss. Janaki Rating: 0 out of 5 stars0 ratingsPallisaamyin Thuppu Rating: 0 out of 5 stars0 ratingsYen Indha Asatuthanam! Rating: 0 out of 5 stars0 ratingsMr. Vedantham Rating: 5 out of 5 stars5/5Kamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Naadugalil Arubathu Naal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsParvathiyin Sangalpam Rating: 0 out of 5 stars0 ratingsNadanthathu Nadanthapadiye! Rating: 0 out of 5 stars0 ratingsRaajiyin Pillai Rating: 0 out of 5 stars0 ratingsSonnapadi Kelungal Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Aindhu Naadugalil Arubathu Naal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsGomathiyin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsC.I.D Chandru Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsVichuvukku Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsPokiri Mama Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Naadugalil Arubathu Naal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsC.I.D Chandru Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsRajathin Manoratham Rating: 0 out of 5 stars0 ratings
Related to Justice Jaganathan
Related ebooks
Rangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsKaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsYen Indha Asatuthanam! Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKarunai Kolai Rating: 4 out of 5 stars4/5Kamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsPokiri Mama Rating: 0 out of 5 stars0 ratingsRamaniyin Thaayar Rating: 5 out of 5 stars5/5Ezhilmigu Indonesia Rating: 0 out of 5 stars0 ratingsRajamani Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMiss. Janaki Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsPallisaamyin Thuppu Rating: 0 out of 5 stars0 ratingsSabash! Parvathi! Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Gomathiyin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsKadakadanu padinga.. kalakalanu siringa.. Rating: 0 out of 5 stars0 ratingsSoundarammal Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsDevasundari Rating: 1 out of 5 stars1/5Marma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Puthra Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Mallika Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsMr. Vedantham Rating: 5 out of 5 stars5/5
Reviews for Justice Jaganathan
0 ratings0 reviews
Book preview
Justice Jaganathan - Devan
http://www.pustaka.co.in
ஜஸ்டிஸ் ஜகநாதன்
Justice Jaganathan
Author:
தேவன்
Devan
For more books
http://www.pustaka.co.in/home/author/devan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
1
'பிப்ரவரி மாசம் 7-ம் தேதி ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் ஜூரி மெம்பர்கள் அன்று வர வேண்டாமென்றும், 21-ம் தேதி திங்கள்கிழமை 9.40-க்கு ஆஜராக வேண்டுமென்றும் ஒரு கோர்ட் அறிக்கை வெளியிடுகிறது.'
தினசரிகளில் ஜூரர்களுக்கு அறிவிப்பு
மூன்று நிமிஷங்களுக்கு செஷன்ஸ் கோர்ட் ஹாலில் கடும் நிசப்தம் நிலவியது. சுமார் 40 அடி அகலமும், 120 அடி நீளமும், உயர்ந்த சுவர்களும் கொண்ட அந்த ஹால், அட்வகேட்களும் இதரர்களுமாக நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
பிரம்மாண்டமான அந்த ஹாலின் ஒரு பக்கத்திலே உயர்ந்ததொரு மேடையின் மீது, பெரிய மேஜையின் முன் நடுநாயகமாக நீதிபதி ஜகந்நாதன் வீற்றிருந்தார். 'பளபள' வென்றிருந்த விசாலமான முகம் அவருடையது. அதிலே நீண்ட நாசியும், மெல்லிய உதடுகளும், தீட்சிண்யமான கண்களும், அதிகாரம் செய்து பழக்கமானவர் அவர் என்பதை எடுத்துக்காட்டின. நரையும் கறுமையும் கலந்த கிராப், நெற்றியின் மேலே ஒதுங்கிக் கொண்டிருந்ததால், அவர் அனுபவத்துடன் மூளையும் விருத்தியாகிக் கொண்டு வருகிறதென்பதை வெளிக்காட்டுவது போல், நெற்றியும் விசாலமாகிக் கொண்டு வந்தது.
அவருடைய இரு கைகளும் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தன. உயர்த்தப்பட்ட புருவமும் அதனால் ஏற்பட்ட சுருக்கங்களும் யோசனையில் இருக்கிறார் அவர் என்பதைப் பறைசாற்றின. மேஜையின் மட்டத்துக்கு மேல் தெரிந்த அவரது உடல் பருத்து வலுவுடன் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த சிவப்பு கவுன், அங்குக் கூடியிருக்கும் சந்தர்ப்பம், ஒரு மனிதன் குற்றவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்யவே என்பதைக் குறித்தது. நீதிபதியின் வலது புறத்தில் நகர ஷெரீப் அமர்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த அலங்காரமான அணி எல்லார் கவனத்தையும் கவர்ந்தது. -
நீதிபதியின் இடது புறத்தில் ஒன்றன்பின் ஒன்றாகப் போடப்பட்டிருந்த இரு பெஞ்சுகளில் ஒன்பது பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த ஒன்பது பேரும் 'ஸ்பெஷல் ஜூரர்'கள். பொது மக்களிலிருந்து நீதி வழங்குவதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெவ்வேறு வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டவர்களாகையினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தனர்.
இவர்களுக்குள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதிக்கு மிக அருகாமையில் இருந்தவர் மிஸ்டர் சஹஸ்ரநாமம். அவர் ஒரு பிரபல மோட்டார் கம்பெனியின் மேனேஜர். இதற்கு முன்பு இவர் ஜூரராக இருந்து, கோர்ட் அனுபவம் உள்ளவராகையால் இவரை போர்மனாக இதரர்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள். சுமார் 50 வயதுள்ளவராகக் காணப்பட்டார்; அநேகமாக முன்புறம் வழுக்கை விழுந்து போன தலை; முகம் மிகவும் பருத்திருந்ததால், கழுத்து இருக்கும் இடம் தேட வேண்டியிருந்தது! அடிக்கடி அவர் முகவாய்க் கட்டையைத் தடவி உதட்டைப் பிதுக்கிவிட்டுக் கொண்டதிலிருந்து, 'என்னடா இங்கே பிடித்துப் போட்டுவிட்டார்களே! மூன்று நாளோ நாலு நாளோ தெரியவில்லையே. ஆபீஸில் உட்கார்ந்தபடி அலுங்காமல் நலுங்காமல் போவதை விட்டு இது எதற்கு?' என்று ஆயாசப்படுபவர்போல் அவர் காணப்பட்டார்.
அடுத்தபடி உட்கார்ந்திருந்தவர் ஒற்றை நாடியாக இருந்தார். ரங்கநாத முதலியார் என்பது பெயர். உள்ளூர் பேங்க் ஒன்றில் அக்கவுண்டண்ட் பதவி வகிக்கிறார். ஜட்ஜைப் பார்ப்பதும், ஷெரீப்பைப் பார்ப்பதும், மறுபடி ஜட்ஜைப் பார்ப்பதுமாகப் பொழுது போக்கினார். வீட்டுக்கு அவர் மாப்பிள்ளை ஒரு வார லீவில் வந்திருக்கிறான். அவன் கூட இருக்க மாட்டாமல் இங்கே பிடித்துப் போட்டு விட்டார்களே என்கிற தாபம் ஒரு புறம்; மாப்பிள்ளை எதிரில் தமக்கு எத்தனை பெரிய பொறுப்பு கிடைத்திருக்கிறதென்று கெளரவமாகச் சொல்லிக் கொள்ளலாம் என்கிற சபலம் ஒரு புறம் - இதில் எது விசேஷம் என்று காண முடியாமல் தத்தளிப்பு அடிக்கடி ஏற்பட்டது.
மூன்றாவது ஆசாமி கொக்கு போல் நாசியுடன் அடிக்கடி கனைத்து விட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். புரொபஸர் சிவசாம்பனை நகரக் கல்லூரியில் கணித புரொபஸர் என்பதாகப் பலர் அறிவார்கள். 'இந்த கேஸ் என்ன பிரமாதம்! எக்ஸ் ப்ளஸ் ஒய் இன்டு எக்ஸ் மைனஸ் ஒய் இஸீகொல்ட்டூ என்கிற மாதிரி 'ஊதி யெறிந்துவிட வேண்டியதுதானே... மேலே நடக்கட்டும் சொல்கிறேன்! ஒரு மாதெமாடிக்ஸ் ஆசிரியரால் ஆகாதது ஒன்று உண்டா?' என்கிற மனோபாவத்தில் அவர் காத்துக் கொண்டிருந்ததாகப் புலப்பட்டது. இதற்கு இத்தனை பேர் கூடி, எண்ணற்ற கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்றுகூட ஒரு சமயம் எண்ணியிருப்பாரோ என்னவோ?
அவருக்கு அடுத்தாற்போல் சுமார் ஆறடி உயரமுள்ள நிஜார் அணிந்த ஓர் ஆசாமி அமர்ந்திருந்தார். அவர் கோர்ட் பூராவையுமே கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். முன் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த சில இளம் அட்வகேட்களைப் பார்ப்பதும் வாயின் இடது பக்கத்தால் மட்டும் அவர்களைத் தெரிந்து கொண்ட பாவனையாகப் புன்னகை செய்வதுமாக இருந்தார். இன்சூரன்ஸ் கம்பெனி செல்வரங்கத்தின் பிணைப்பில் இவர்களில் அநேகர் அகப்பட்டுக் கொண்ட பேர்; மிகுதியுள்ளவர் இனி தப்ப முடியாது என்று கவலை கொள்ளத் தொடங்கியிருந்ததால் ஆச்சரியம் இல்லை. பேச்சிலே அவ்வளவு வாசாலகமாக இருப்பவர். அவர் ஒரு புள்ளியைக் குறி வைத்தார் என்றால், மடக்குவதில் தவறியது என்பது இவர் அகராதியில் கிடையாது. இப்போது இந்தப் புதிய சூழ்நிலையை அவர் மிக ரசித்தார்; விரும்பினார்; அதன் மூலம் தமது தொழிலை விருத்தி செய்து கொள்ள இடம் செய்து கொண்டார் என்று முடிவு செய்வதும் தவறாகாது. செல்வரங்கம் அத்தனை சாமர்த்தியசாலி.
பின் பெஞ்சியில் முதலில் உட்கார்ந்திருந்தவர் ஓர் ஆடிட்டர். ஜோசப் ஞானமுத்து என்பது அவர் பெயர். அவர் வட்டாரத்தில் பிரபலமானவர். 'ஜூரி என்று அழைத்து விட்டார்கள். எதிர்த்துப் பேச நமக்கு வாய் இல்லை; உட்கார்ந்துவிட்டுப் போவோம்' என்றதொரு விரக்தியுடன் வந்து உட்கார்ந்து விட்டார்.
அவருக்கு இப்போது ஒரே ஒரு கவலை, வீட்டுக்கு எத்தனை சீக்கிரம் திரும்ப முடியுமோ அத்தனை சீக்கிரம் போக வேண்டும்! ஞாபக மறதி அதிகம் உள்ளவர் ஆகையால், அடிக்கடி அலமாரிக் கதவைத் திறந்து போட்டுவிட்டு வெளியே போய்விடுவார். இன்று ஞாபகமாகச் சாத்திக் கொண்டு வந்தோமா என்கிற சந்தேகம் அவருள் புகுந்து, உபத்திரவம் செய்தது.
அடுத்தாற்போல், ஆறாவது பேர்வழி ஒரு ஹோட்டல் முதலாளி. 'நொச்சாட்டு நாராயணசாமி ஐயரின் லஞ்ச் ஹோம்' என்று தேடிக்கொண்டு வருவார்களே! அவருக்கு இங்கே இருந்தாலும் எங்கே இருந்தாலும் லட்சியமில்லை; மச்சினன் பயல் பெட்டியடியில் உட்கார்ந்து கொள்வான், கவனித்துக் கொள்வான். இவர் தமாஷாக இருந்துவிட்டுப் போகலாம். அதுவும் வியாபாரம் பத்து மணிக்கு ஓய்ந்து, மறுபடி ஐந்து மணிக்குத்தானே ஆரம்பிக்கிறது. அவருடைய ஒரே குறை, உட்காருகிற இடம் இன்னும் சற்று அகலமாக, அடியில் ஒரு திண்டு தலையணை போட்டிருக்கப்படாதா என்பதுதான்.
ஏழாவதாக உட்கார்ந்திருந்தவர், ராமநாத சாஸ்திரி; உள்ளூரில் ஒரு வியாபாரி. பி. ஏ. பாஸ் செய்துவிட்டு, உத்தியோகம் வேண்டாமென்று நிலப்புலங்களைப் பார்த்துக் கொண்டிருந்து வந்தார்; இப்போது ஒரு 'ஆயில்மன்' பிஸினஸ் தொடங்கியிருக்கிறார். கடிகார ரிப்பேர் தெரிந்தவராகையால் ஒரு மூலையில் அதையும் அவரே செய்கிறார். கிராமத்தில் இருந்து, மதாசாரங்களில் ஊறி, பூஜை புனஸ்காரங்களைக் காலை மாலை வேளைகளில் ஒரு காரியமாக அழைத்துக்கொண்டு வந்திருப்பவர் அவர். சந்தனக் கீறலும் குங்குமப் பொட்டும் அவர் ஆழ்ந்த பக்தியின் சின்னங்கள். கோயிலைப் பார்த்துக் கை கூப்பாமல் போகிறவனை, தாட்சண்யமின்றி தூக்கு மேடைக்கு அனுப்பி விடவேண்டுமென்பது அவர் அபிப்பிராயம். எனவே, அவர் பொழுதில் முக்கால்வாசி நாஸ்திக நிந்தனையில் செலவாகி வந்ததில் ஆச்சரியம் இல்லை.
எட்டாவதாக அமர்ந்திருந்த மிஸ்டர் முத்தையா பிள்ளை வாழ்க்கையில் பல துறைகளில் சேவை செய்து பார்த்தவர். இன்று எந்த உத்தியோகத்தையும் ஏற்க அவர் தயார். அவர் பேசாத விஷயமும் இல்லை. வருமானம் என்பதும் லட்சியம் இல்லை. கமிஷன் ஏஜெண்டாக சம்பாதிக்கிறார்; வக்கீல் குமாஸ்தாவாக நல்ல அனுபவம் உண்டு; வீடு கட்டும் கான்ட்ராக்டராக இருந்து கொள்ளை கொள்ளையாகக் குவித்திருக்கிறார். அரசியல் விஷயங்களில் முங்கி எழுந்திருக்கிறார்; அவரைத் தெரியாத பிரமுகர் இல்லை.
கடைசியாக, பெஞ்ச் ஓரமாக உட்கார்ந்து, விரிந்த கண்களுடன் எல்லாவற்றையும் விழுங்கி விடுகிறாப்போல பார்த்துக் கொண்டிருப்பவர் ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியர். கெளரி சங்கர் என்று பெயர். அதைவிட அவருடைய புனைபெயர் 'மண்டலி' என்பது அதிகம் பிரபலமானது. துப்பறியும் கதைகளே அவருக்கு ஜீவநாடி. தினம் ஒரு நவீனம் படிக்காவிட்டால் அன்று அவர் வரை வியர்த்தமே.
அவர் எழுத்துகளில் நூற்றுக்கு எழுபத்து ஐந்து, போலீஸும் கொலையும் கொள்ளையும் மர்மமும்தான்! அநேக புத்தகங்கள் படித்து மானசலோகத்தில் இதுவரை கற்பனை செய்து கொண்டிருந்தது போக, இன்று கண்ணெதிரிலே ஒரு கேஸ் விசாரணையைப் பார்க்க நேர்ந்ததில் அவர் சொர்க்கப் பிராப்தியே அடைந்து விட்டது போலவே ஆனந்தம் கொண்டிருந்தார். 'இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு ஓர் அபூர்வமான கதை, இருபத்தைந்து வாரம் நான் எழுதிவிடுவேனே' என்று அவர் மனைவியிடம் மார்தட்டிக் கொண்டு வந்திருந்தார்.
இதற்கு முன்பு கிரிமினல் கோர்ட்டின் உட்புறத்தை அவர் பார்த்ததே இல்லை. 'எவ்வளவு அழகு, என்ன பந்தா, எத்தனை கருக்கு!' என்று வியந்தே போனார். 'நியாயப்படி, சட்டப்படி நடப்பதென்கிறார்களே, இங்கே அல்லவா அவை இருக்கின்றன. புத்திசாலிகள், சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சிங்கங்கள், மனத்தில் குரோதம் இல்லாதவர்கள் ஒன்றுகூடி, ஒரு ஆள் தண்டனை அடையலாமா கூடாதா என்று கண்டுபிடித்து முடிவு சொல்வது என்ன அற்புதம்! எப்பேர்ப்பட்ட தர்மம்!' என்று திறந்த வாயை மூடாமல் இருந்தார்.
முக்கியமாக, கோர்ட்டின் நீண்ட தாழ்வாரங்கள், தயங்கி நிற்கும் கட்சிக்காரர்கள், கவுன் அணிந்த அட்வகேட்கள் அவசரமாகச் செல்லுதல், 'உஸ்ஸ்.... உஸ்ஸ்...' என்று சீறிக் கொண்டு வெள்ளித் தடி சுமந்த டவாலிகள் முன் செல்ல நீதிபதிகளின் கம்பீர நடமாட்டம், அவர்கள் வந்தவுடன் மரியாதை செய்தல், கோர்ட்டுக்கென்றே ஏற்பட்ட பாஷை, 'சர்வ வல்லமையுள்ள கடவுள் சாட்சியாக' என்ற பதப்பிரயோகம் - எல்லாம் அவருக்கு அமிர்தமாக இருந்தன. 'கடவுள்' என்ற பதம் கோர்ட்டினுள் கடவுளுக்கே ஒரு தனிக் கெளரவம் அளிப்பதாக அவருக்குப் பட்டது!
அவர் மனத்தின் ஆழத்தில் ஒரு சிறு குறையும் உண்டு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தனை நவீனங்கள் எழுதி, பொது மக்களுக்கிடையே பெயர் வாங்கியும் நாம் போர்மன்னா இல்லையே என்பதுதான் அது. 'வீட்டில் மனைவி கேட்பாள், ஒரு பொய் சொல்லி வைத்தால் போகிறது!' என்று சமாதானம் செய்து கொண்டு, 'மண்டலி ' சுற்றிலும் பார்த்தார்.
நீதிபதியின் ஆசனத்துக்கு நேர் அடியில் கோர்ட் சிப்பந்திகள் இருவர் உட்கார்ந்து ஏதோ அவசரமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். 'நடவடிக்கைகள் ஆரம்பமாகவில்லையே; அதற்குள் என்ன எழுதுவதற்கிருக்கிறது!' என்று இரண்டொரு ஜூரர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணம் மூன்று நிமிஷ நேரமே. நீதிபதி முன்புறம் குனிந்து, ஏதோ சில வார்த்தைகள் மெல்லமாகக் கேட்டார். ஜூரர்களுக்குச் சுமார் எட்டடி அப்பால் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆஜானுபாகுவான ஒருவர் சட்டென்று எழுந்து, 'மை லார்ட்?' என்று வினவினார்.
நீதிபதி மறுபடி தமது கேள்வியைக் கேட்டார். எழுந்தவர் நாலைந்து வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டுத் திரும்பவும் அமர்ந்து கொண்டார்.
அடுத்த நிமிஷம் ஒரு கோர்ட் சிப்பந்தி ஜூரர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே எழுந்திருக்கச் சொல்லி, ஒரு வாசகத்தைச் சொன்னார். 'சர்வ வல்லமையுள்ள கடவுள் முன்னிலையில்... சாட்சியத்தையொட்டிய சத்தியமான தீர்ப்பையே தருவேனாகவும்' என்று ஒவ்வொருவரும் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள். 'மண்டலி' அதை வெகு ஸ்பஷ்டமாகச் சொல்லி, இந்தக் காரியத்தில் தமது இருதய பூர்வமான ஒத்துழைப்பைக் கோர்ட்டாரவர்களுக்கு அறிவுறுத்த விரும்பினார். ஆனால், ஏனோ அவர் குரல் அதிகம் எழும்பவில்லை.
நீதிபதி கனைத்துவிட்டுக் கொண்டு, தமது கழுத்துப் பட்டையைத் தளர்த்திக் கொண்டார். அவர் முகம் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்ததாக நாலைந்து ஜூரர்கள் நினைத்தார்கள். இந்தச் சமயம் கோர்ட்டுக்குள் நோட்டும் பென்சிலுமாக இரண்டு பேர் பிரவேசித்து, குறிப்பிட்ட இடங்களில் உட்கார்ந்தார்கள். வழக்கமாக இந்த அலுவலில் ஈடுபட்ட பத்திரிகை நிருபர்கள் இவர்கள் என்று ஊகிக்கும்படி இருந்தது அது.
ஆஜானுபாகுவாக எழுந்து நின்றவர் மறுபடி எழுந்தார். அவருடைய கறுப்பு கவுன் ஒய்யாரமாகப் பின்னால் புரண்டது. ஜுரர்களின் திருஷ்டி ஏக காலத்தில் அவர் மீது பதிந்தது. அவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். ஃபிரேம் இல்லாத மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். சதைப் பற்றற்ற முகம்; அடர்ந்து கறுத்த புருவங்கள், நீண்ட நாசியின் உயரே நெற்றிப் பொட்டில் கூடின. உதடுகள் தடிமனாக இருந்தன; பற்கள் பெரியனவாக ஆனால் வரிசையாக வெளிப்பட்டன; குரலில் ஒரு கடினம், ஒரு தீர்மானம், ஓர் அழுத்தம் - 'நான் சொல்கிறேன், நீ கேள்!' என்ற திடம் தொனித்தது. ஆனால் கேட்கத் தூண்டும் ஓர் இனிமையும் இருந்தது. நீதிபதியிடம் மரியாதை உண்டு. ஆனால் அநாவசியமான பயம் கிடையாது என்பதைத் தாம் நின்ற தோரணையில் காண்பித்தார்; அவர் விறைப்பாக ஒரு கணம் நிமிர்ந்து நீதிபதியை நேரே நோக்கினார்.
பிறகு குனிந்தார். அவர் பார்வை படும்படி ஓர் உதவியாளர் ஒரு ஃபைலை அவசரமாக நகர்த்தினார்.
எட்டாவது ஜூரரான முத்தையாபிள்ளை முன்புறம் சாய்ந்து, நான்காவது ஜூரர் செல்வரங்கத்தின் தோளில் மெல்லத் தட்டி, 'இவர் யார்?' என்று ரகசியமாக விசாரித்தார்.
செல்வரங்கம் திரும்பிப் பாராமலே, 'இவரைத் தெரியாதா உங்களுக்கு?' என்று திருப்பிக் கேட்டார்.
இவர்களிடையே நடந்த சம்பாஷணையை உதவி ஆசிரியர் கெளரிசங்கர் கவனித்தார். அவருக்கும் நிற்பவர் யார் என்று தெரியாது. இவர்கள் வினா விடைகளிலிருந்து தாம் வாயைத் திறவாமலே தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
'தெரியாமல் தானே கேட்கிறேன்!'
க்ரெளன் ப்ராஸிக்யூட்டர் கருணாகரன், இப்போது தெரிந்ததா?'
'ஓ!'
கெளரிசங்கருக்கு ஞாபகம் வந்தது. கருணாகரனைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார்; பத்திரிகைகளிலும் படித்திருக்கிறார். 'கேள்விகள் போட்டுக் குடைந்து தள்ளுகிறாரே' என்று பலமுறை நினைத்துக் கொண்டும் இருக்கிறார். அடடே! அவர்தானா இவர்?
கோர்ட்டில் எங்கும் கசமுசவென்று ஒரு பேச்சுச் சத்தம் எழுந்து வியாபித்துக் கொண்டிருந்தது. நீதிபதிக்கு அப்பால் நின்ற ஒரு சவலையான ஆசாமி, பலமுறை நெக் - டையை உருவி விட்டுக் கொண்டிருந்தவர், தலையை நீட்டி, 'சைலன்ஸ்!' என்று குரல் கொடுத்தார்.
சத்தம் சட்டென்று அடங்கியது. மூலையில் இருந்த கெளரிசங்கர் மறுபடி ஒருமுறை கோர்ட் ஹாலைப் பார்த்துக் கொண்டு வந்தார், பிரதட்சிணமாக. நின்று கொண்டிருக்கும் க்ரெளன் ப்ராஸிக்யூட்டருக்கு இருபுறமும் அவருக்கு இரு உதவியாளர்கள்; முன்னால் பல சட்டப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அம்மாடியோவ்! குறிப்பாக இரண்டு புத்தகங்களின் கனம் மட்டும் இரண்டு அடி இருந்ததே.
வளைவு மேஜையின் முன், மற்றும் சில அட்வகேட்டுகள். அங்கும் அநேக சட்டப் புத்தகங்கள். பின்னால் இரு நீண்ட பெஞ்சுகள். அவற்றில் நெருக்கமாகப் பல இளம் அட்வகேட்டுகள். சற்றுப் பின்னால் கெளரிசங்கர் திடுக்கிட்டார். ஒரு கூண்டு! அதனுள் நின்றான் ஒரு கான்ஸ்டபிள். அவன் பக்கத்தில் சுமார் ஐந்தே முக்கால் அடி உயரமும், ஏற்ற பருமனும், தூய வெள்ளை ஆடையும், பிரகாசமான முகமும், பளீர் என்று துடைத்துப் போடப்பட்ட மூக்குக் கண்ணாடியும் நிர்ப்பயமான தோற்றமுமாக ஓர் ஆசாமி நின்று கொண்டிருந்தான். வயது முப்பதுக்கு மேல் இராது. அவன் ஏன் அங்கே நிற்கிறான்?
இவனா குற்றவாளி?
கொலை செய்தவன் கொள்ளையடித்தவன் என்று கெளரி படித்திருக்கிறாரே ஒழிய, நேரில் யாரையும் பார்த்ததில்லை. அவர்களைப் பார்த்தவுடனேயே துஷ்டர்கள் என்று சொல்லி விடலாமே, இதற்கு ஏன் பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறார். குற்றம் செய்தவன் என்றால், விகாரமான உருவமும் அழுக்குச் சட்டையும், சிவப்புக் கண்களும் பரட்டைத் தலையுமாக இருக்க வேண்டும் என்பதில்லை போல் இருக்கிறதே! இங்கே நிற்பவன் குற்றம் செய்தவனா? கொலை செய்தவனா? அல்லது, வேறு யாராகவாவது இருக்குமா பார்க்கலாம், சற்றைக்கெல்லாம் அதுவும் தெரிந்துவிடப் போகிறது....
திருஷ்டி பின்னால் சென்றது. அங்கும் சில அட்வகேட்டுகள் நின்றார்கள். மூன்று வரிசை பெஞ்சுகளில் விசிட்டர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பொழுதுபோகாமல் கேஸ் விசாரணையைப் பார்க்க வந்திருப்பவர்கள் அவர்கள்; பிறருடைய துயரங்களை, சங்கடங்களை சண்டைகளைக் கவனித்து வம்பு வளர்க்க வந்திருக்கிறார்கள்! ஆனால், சட்டப்படி பொது ஜனங்கள் மத்தியில் நீதி செலுத்தப்பட வேண்டும் என்று ஏற்படுத்தியிருக்கிறார்களே! தமக்குத் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தார் கெளரி; யாரும் இல்லை. உற்சாகம் சிறிது குறையவே, அவர் திருஷ்டி அங்கிருந்து அகன்று மேலும் சுழன்று ஒரு சுற்று வந்தது.
அவருக்கு நேர் எதிர்ப்புறத்தில் ஒரு மேஜையின் முன் ஸ்தூல சரீரியாக நெற்றியில் மூன்று பட்டை விபூதியுடன் உட்கார்ந்து கொண்டிருப்பவர் யார்? ஓகோ... நாம் என்ன முட்டாள்! எதிரி சார்பாகப் பேசப் போகும் வக்கீல்! ப்ராஸிக்யூஷன் குற்றச் சாட்டுகள் செய்ய, அதை எதிர்க்கப் போகும் மனிதர் அல்லவா அவர்? பீஸ் வாங்கிக் கொண்டுதான் அந்தப் பணியைச் செய்கிறார்; ஆனாலும், அவர் சாமர்த்தியத்தில் பெரிய அளவு கட்சிக்காரரின் ஜயம் அடங்கியிருக்கிறதே! இதோ இவர், தெய்வ பக்தி உள்ளவர் மட்டும் இல்லை; அதை விளம்பரம் செய்து கொள்பவர்போலும் இருக்கிறதே!
இவர் பெயர் என்ன என்று யாரைக் கேட்கலாம்? கெளரி தமது பக்கத்துப் பேர்வழியைத் தைரியமாகக் கேட்டு விட்டார். அவரும் உடனே, 'எனக்குத் தெரியாதே' என்று பதில் சொல்லி, நாலாவது ஜூரரை மறுபடி விசாரித்தார்.
செல்வரங்கம் தாம் வியாபகர் என்பதை மறுபடி வெளிப்படுத்திக் கொண்டார். 'அவரா? டிபென்ஸ் கவுன்சில் மிஸ்டர் ஈசுவரன்; போன வருஷம் மரீனா மர்டர் கேஸ்லே அப்பியர் ஆகலே? உங்களுக்குத் தெரியாது?'
'ஓ!' என்றார் ஜூரர் நம்பர் எட்டு.
கெளரி மூன்று ஜூனியர்களின் நடுவே உட்கார்ந்திருந்த ஸ்ரீ ஈசுவரனை வெறிக்கப் பார்த்தார். முதல் அபிப்பிராயம். இவர் என்னத்தைப் பேசப் போகிறார் என்றுதான் பட்டது. 'இருக்கட்டும் பார்க்கலாம்!' என்று திரும்ப நீதிபதியைப் பார்த்தார்.
மேஜையின் மீது இப்போது நாலைந்து புத்தகங்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தன. நீதிபதியின் முன்பு இருந்த ஒரு மசிக்கூடும் பேனாவும் இப்போது அவர் கண்ணில் பட்டது. சிடுக்கான வேலைதான் நீதிபதியினுடையது. எது சத்தியம், எது அசத்தியம் என்று தெரிந்து கொள்வது சங்கடம் அல்லவா? கெளரிசங்கருடைய சின்னப் பெண்ணும் பிள்ளையும் சண்டை போட்டுக்கொண்டு வந்து நிற்கும் போது அவரால் ஒன்றும் சொல்ல முடிவதில்லை!
'மை லார்ட், ஜென்டில்மென் ஆப் தி ஜூரி!'
பேசியவர் கருணாகரன்; அவருடைய குரல் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே என்று ஆச்சரியப்பட்டார் கெளரி. இதே நிலையில் இதர ஜூரர்களும் நாலாம் நம்பர் நீங்கலாக, இருந்தார்கள். ஒரு மணியின் நாதம் அதனுள் இருந்தது. மேலும் அதே சுருதியில் அவர் விடாது பேசிக் கொண்டு போனார். பூர்ணமான நிசப்தத்திலே ஒரு சிறந்த கச்சேரியில் ராக ஆலாபனத்தை ரசிப்பது போல் கோர்ட் முழுமையும் கேட்டது.
'இதோ நீங்கள் உங்கள் எதிரில் காணும் கைதி... (குனிந்து ஃபைல்களைப் பார்த்து) வரதராஜ பிள்ளை, கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறார். தாம் நிரபராதி என்று அவர் கூறுவதாலேயே இப்போது இந்த கேஸ் நடைபெறுகிறது.....
ஜூரர்களே! சாட்டப்பட்டிருக்கும் குற்றம் மிக மிகக் கடுமையானது. கொலைக் குற்றம் அது. குற்றம் நடந்த விவரங்களை இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அவற்றிலே சிற்சில இடங்களில் தொடர்பில்லை என்று தோன்றினாலும், நான் உங்கள் முன்னிலையில் கூறப்போகும் கேஸ் விவரங்கள் கைதிதான் குற்றம் செய்தவர் என்று நிரூபிக்கப் போதுமானதென்றே நான் நம்புகிறேன்.
முதற்கோப்பில் நான் ஒப்புக் கொள்கிறேன்; என் கடமை மனத்துக்கு மிகுந்த ஆயாசத்தை உண்டு பண்ணியிருக்கிறதென்பதே அது. இது போன்ற எல்லா கேஸ்களிலும் ஆயாசம் அளிக்கும் அம்சம் உண்டு. எனினும், இந்த கேஸில் முக்கியமாக அந்தத் தன்மை அதிகம் காண்கிறது.
கொலைக் குற்றம் செய்பவன் சாதாரணமாகக் கல்வி அறிவில்லாதவனாகவும், வழக்கமாகக் குற்றங்கள் செய்பவனாகவும் இருப்பான். இங்கே, இதோ நிற்கும் கைதி, படித்தவர்; பி.ஏ. பட்டம் வாங்கியவர். பலருடன் பழகியவர். உத்தியோகம் பார்த்து, நல்ல சம்பாத்தியம் உள்ளவர். குடும்பப் பொறுப்பு உடையவர். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உபகாரியாக இருப்பவர்.
எனினும் இவர் இப்போது குற்றம் செய்துவிட்டார் என்பதற்குப் போதிய முகாந்திரங்கள், ருசுக்கள், சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்கின்றன. சட்டத்தின் எதிரே சீமானானாலும், ஏழையானாலும் ஒன்றுதான். தனவானாக இருப்பதாகக் குற்றம் செய்து விட்டுத் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது; ஏழையாக இருந்ததற்காக, செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை.
ஜென்டில்மென் ஆஃப் தி ஜூரி! இவர் செய்த குற்றம் கொலைக் குற்றம். இவர் செய்தார் என்பதற்குச் சாட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை நான் உங்கள் முன் கொண்டு வருகிறேன். அவ்வளவே என்னுடைய கடமை.
இதில் உங்களுடைய பொறுப்பு மிகவும் கடினமானது என்பதை முன்னதாகவே எச்சரித்து விடுகிறேன். நீங்கள் தான் இருக்கும் சாட்சியங்களிலிருந்து, கைதிதான் குற்றம் செய்தார் என்பது சந்தேகமற ருசுவாகிறதா என்று தீர யோசித்து, கனம் கோர்ட்டாரவர்கள் நீதி வழங்க உதவ வேண்டும். உங்கள் பொறுப்பு, கைதி குற்றவாளியா இல்லையா என்று தேர்ந்து சொல்வதுடன் தீர்ந்துவிடுகிறது. கனம் நீதிபதியவர்கள் உங்கள் தீர்ப்புக்கு ஏற்றபடி தண்டனையோ, விடுதலையோ அளிப்பார்கள்; அது அவருடைய பொறுப்பு.
ஜூரர்களே! மற்றும் ஒருமுறை கூறிவிடுகிறேன்: 'இதில் உங்களுடைய கையிலே, கூண்டில் நிற்கும் கைதியின் விதி இருக்கிறது. அவரைக் குற்றவாளி என்றோ நிரபராதி என்றோ தீர்மானிக்க வேண்டியது நீங்களே. நீங்கள் மட்டுமே! மற்றொன்றும் சொல்லி விடுகிறேன்.
நமது சட்டப்படி குற்றம் செய்த பத்துப் பேர் போதுமான சாட்சியங்கள் இல்லாமையினால் விடுதலை செய்யப்பட்டாலும் படலாம். குற்றம் செய்யாத ஒருவன்கூட தண்டனை பெற்றான் என்பது கூடாது. இதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.
உங்களில் ஒவ்வொருவரும் சாட்சியங்களைக் கவனித்து வரவேண்டும். நிஜத்தைப் பொய்யிலிருந்து அகற்றி, உங்கள் பரந்த நடுநிலை பெற்ற மனத்திலே அலசி, உங்கள் தீர்ப்பை அளிக்க வேண்டும்.'
ஸ்ரீ கருணாகரன் பேசுவது வசீகரமாக இருந்தது. அவர் அங்க அசைவுகள், முகபாவம் எல்லாம் கவர்ச்சிகரமாக இருந்தன. குரலிலே இருந்த வெண்கல நாதம், அவர் பேசும்போது புருவங்கள் ஏறி ஏறி இறங்கிய விதம், 'நியாயம் ஒன்றே முக்கியம், மனிதன் முக்கியமில்லை' என்பது வார்த்தைகளில்கூடத் துளியும் ஈரப்பசை இன்றி துவனித்த அதிசயம், ஜுரர்கள் பார்த்தும் கேட்டும் அசந்து போனார்கள். இது அவர்களுக்குப் புதிய அனுபவம். 'இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று ஒரு பிரமை தட்டியது. கெளரிசங்கருக்கு ஏற்பட்ட ஆர்வத்தில், அன்று பூராவும் கருணாகரனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கவும் தயாராக இருந்தார்.
இரு தோள்களையும் உயர்த்திவிட்டு, கன்னங்கரேலென்றிருந்த கவுனைச் சரிப்படுத்திக் கொண்டார் கருணாகரன். தமது மூக்குக் கண்ணாடியை மூக்கின் உயரே கொண்டு நிறுத்தி, ஜஸ்டிஸ் ஜகந்நாதனை உத்தரவு கேட்டது போல் பார்த்தார். பிறகு ஜூரர்களை ஒரு நோட்டம் விட்டார். இடது காலைத் தூக்கி அருகே போட்டிருந்த பெஞ்சியின் மீது வைத்துக்கொண்டு மறுபடி பேசத் துவங்கினார்:
'ஜென்டில்மென் ஆப் தி ஜூரி... அதோ கைதிக் கூண்டில் நிற்பவர் வரதராஜ பிள்ளை என்பவர். இந்த நகரத்தில் இவர் சென்ற பன்னிரண்டு வருஷங்களாக உத்தியோகம் பார்த்து வருகிறார். சென்ற வருஷ இறுதியில் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரையில் இவர் பேரில் ஒருவித மாசு மருவும் இருந்ததாகக் கண்ட பேர் இல்லை. நவம்பர் மூன்றாம் தேதி, ஜூரர்களே! அன்றிரவுதான் அந்தப் பொல்லாத மூன்றாம் தேதி இரவில்தான்....'
பயங்கரமான நிசப்தத்தில், கணகணவென்று அவர் குரல் ஒலித்தது. அவர் ஜோடித்த கதை எல்லாருடைய நெஞ்சிலும் விவரிக்க முடியாததொரு உணர்ச்சியை, திகிலை, அதிர்ச்சியை, ஆச்சரியத்தை, நெகிழ்ச்சியை உண்டாக்கியது. மந்திரத்தில் கட்டுண்டவர்கள்போல் மூச்சு விடவும் மறந்து அவ்வளவு பேரும் உட்கார்ந்திருந்தார்கள்.
2
'எவனொருவன் கொலை செய்கிறானோ, அவன் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுவான்; அதனுடன் கூட அபராதமும் விதிக்கப்படலாம்.'
- செக்ஷன் : 302, அத். XVI - இந்தியன் பீனல் கோட்
க்ரெளன் ப்ராஸிக்யூட்டர் கருணாகரனுக்குக் கிரிமினல் கேஸ்களில் ஆரம்பவுரையும் முடிவுரையும் 'தண்ணீர் பட்ட பாடு தான் என்று சொல்வார்கள். நாடக உலகத்திலே முற்றிப் பழுத்துப் போன ஒரு நடிகர், சற்றும் அஞ்சாமல் மேடைமீது தோன்றி, அனாயாசமாகப் பல நாடகங்களில் பல சந்தர்ப்பங்களிலே உபயோகித்த வார்த்தைகளைக் கொண்டு வந்து பொருத்தமான இடங்களில் இணைத்து, தமது பரந்த அனுபவத்தின் தன்மையை வெளிப்படுத்துவது போலவே, இவரும் தம்முடைய உரையைக் கையாண்டார். எனவே, அதில் தானாகவே மெருகும் சுவையும் திடமும் வந்து சரண் புகுந்து கொண்டன என்று சொல்லும்படி இருந்தது.
நடுநடுவே அவர் நிறுத்திச் சற்று நழுவியிருக்கும் தமது கறுப்பு கவுனைத் தோள் பட்டையின் மீது ஏற்றிவிட்டுக் கொள்வதும், நாசியின் மேலே மூக்குக் கண்ணாடி இறங்கி விட்டதாகப் பாவித்து, அதை உயர்த்தி வைத்துக் கொள்வதும், புருவங்களைச் சுருக்குவதும், அடி உதடுகளைக் கடித்துச் சிந்தனையில் ஈடுபட்டிருப்பது போல் பாவனை செய்வதும் ஜூரர்கள் மனத்திலே அவரைப் பற்றிய அபிப்பிராயத்தை மிகவும் உயர்த்தியது என்பதில் சந்தேகம் இல்லை.
'மை லார்ட், ஜென்டில்மென் ஆப் தி ஜூரி' என்று சற்றைக்கொரு முறை அவர் மறக்காமல் அழைத்துக் கொண்டிருந்தது ஜூரர்களுக்கு அவரிடம் ஒரு தனி மதிப்பை வளர்த்தது. மேலும் அவர் பிரசங்கத்தை உன்னிப்பாகக் கேட்டார்கள். கருணாகரன் தங்கு தடையின்றிப் பேசிக் கொண்டே போனார்:
'சென்ற வருஷம் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு இதோ உங்கள் எதிரே கூண்டில் நிற்கும் கைதி, ஒருவருக்கு விஷம் கொடுத்து, அது காரணமாக அவர் அன்றிரவு 12 மணிக்கு முன் இறந்து போனதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.
இந்தக் குற்றத்தை இன்னும் பெரிதாக, இன்னும் பயங்கரமாகக் காண்பிப்பது, இறந்து போனவர் குற்றம் சாட்டப்பட்டிருப்பவரின் சொந்த மாமனார் என்பதாகும்! அதுவும் தவிர குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் பதினைந்து வருஷங்களுக்கு முன்பு இந்த நகருக்குப் பிழைப்புக்கு உத்தியோகம் தேடி வந்த சமயம், இறந்து போயிருப்பவர் அவருக்குப் பல உதவிகள் செய்ததுடன், தமது வீட்டிலே அழைத்து வைத்துக் கொண்டு நல்ல இடத்தில் உத்தியோகம் தேடிக் கொடுத்து, தம் மகளையும் இவருக்கே மணம் செய்வித்து, வாழ்வதற்குச் சகல வசதிகளும் செய்து தந்தவர்.
ஜென்டில்மென் ஆப் தி ஜூரி!
இப்போது உங்கள் மனத்தில் ஒரு சந்தேகம் எழலாம்; அல்லது, இதற்கு முன்பே அது எழுந்திருக்கலாம்; மனித சுபாவம் என்பது விசுவாசமும் நன்றியறிதலும் கொண்டதாயிற்றே! அப்படியிருக்க, தமக்குப் பிழைப்புக்கு வழி செய்து கொடுத்து, மகளையும் மணம் செய்வித்த ஒருவரை ஒரு மனிதன் கொலை செய்வானா? அதற்கு அவன் மனம் இடம் கொடுக்குமா? அதுவும் கல்வி அறிவும் புத்தியும் இருதயமும் கொண்ட ஒரு மனிதன் மகா துரோகமான இந்தச் செயலில் இறங்குவானா? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
என்னுடைய அனுபவத்தின் மீது சொல்கிறேன்; உலகத்திலே கொலைகள் நடந்து இருப்பதன் காரணங்களை ஆராய்ந்து பார்த்தவர்கள், அதிக வெறுப்பு ஏற்படுவது அதீதமான அன்பின் மேல்தான் என்றே சொல்வார்கள். சந்தர்ப்பங்களின் விஷமத்தினால் இம்மாதிரி அன்பு வெறுப்பாகிறது. அதேபோல் அசாத்தியமான நன்மைகளைப் பெற்று பெற்றுப் பழக்கப்பட்ட ஒருவன் சிறிது ஏமாற்றம் அடைந்த சமயங்களிலும் தனது மனத்தின் கட்டைத் தளரவிட்டு, அசாத்தியமான துவேஷம் கொள்வது சாத்தியம்தான்.
பல கேஸ்களிலே அனுபவம் உள்ள கோர்ட்டாரவர்களுக்கு, நான் சொல்வதன் உண்மை தெரியாததல்ல. எல்லை மீறிய நம்பிக்கை வைத்து விட்டவர்கள்தான் எல்லை மீறிய ஏமாற்றங்களுக்கும் உள்ளாகிறார்கள். ஏமாற்றங்கள் எத்தனையோ சமயங்களில் அடாத செயல்களை, நம்பத்தகாத செயல்களை, குரூரமான செயல்களைச் செய்யத் தூண்டியிருக்கின்றன.
கூண்டில் நிற்கும் வரதராஜ பிள்ளை இந்தப் பெருங்குற்றம் செய்வதற்கு முகாந்திரமான சந்தர்ப்பங்களை நான் இப்போது சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். இது உங்கள் மனத்திலே நன்றாகப் பதிவதற்கு மிகவும் அவசியமாக இருக்கும் சில பழைய சம்பவங்களையும் நான் இங்கே எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது...'
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் ஏதோ சொல்வதற்கு அறிகுறியாகக் கனைத்துவிட்டுக் கொண்டார். க்ரெளன் ப்ராஸிக்யூட்டரும் ஜுரர்களும் அவரைக் கூர்ந்து கவனித்தார்கள். பத்து விநாடிகள் தாமதித்தே அவர் பேசினார்.
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்: ஆமாம்... இப்போது கைதியைப் பற்றின கதை பூராவுமே சொல்லப் போகிறீர்களா?
கருணாகரன்: மை லார்ட்! பூராவும் இல்லை... இறந்து போன தியாகராஜ பிள்ளையும், கூண்டில் நிற்கும் கைதியும் ஆரம்பத்தில் எப்படிப் பழகினார்கள், பிற்பாடு விரோத பாவம் எப்படி வந்தது என்பதை நான் சுருக்கமாக....
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்: ரொம்ப சரி! 'சுருக்கமாக' என்பது ஞாபகமிருக்கட்டும்... அதுதான் கேட்டேன்.
கருணாகரன் (புன்னகையுடன்) : மை லார்ட்! என் பேரில் இதுவரை வந்திருக்கும் புகார்கள் எல்லாமே நான் சுருக்கமாகப் பேசுகிறேன் என்பதுதான்....
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (சிரித்துக் கொண்டே) : சுருக்கு மாட்டுகிறாற் போல் பேசுகிறீர்கள் என்றா?
(கோர்ட்டில் சிரிப்பு : 'சைலன்ஸ்! சைலன்ஸ்' என்று நெக்-டை போட்ட சவலை உத்தியோகஸ்தரின் குரல் எழுந்து, மீண்டும் நிசப்தம் நிலவியது.)
கருணாகரன் தமது பேச்சைத் தொடர்ந்தார்: 'மை லார்ட், ஜென்டில்மென் ஆப் தி ஜூரி! நுங்கம்பாக்கத்தில் தியாகராஜ பிள்ளை என்ற பெயர் பிரபலமானதென்று நான் அறிகிறேன். இவர் பெரியதொரு வியாபாரத்தை நடத்தி ஏராளமான சொத்துகளைச் சேர்த்தவர். ஆறு வருஷங்களுக்கு முன்பு தாம் நேர்ப்பட வியாபாரத்திலிருந்து விலகிக் கொண்டு, ஓய்வெடுத்து வந்திருக்கிறார். கூண்டிலிருக்கும் கைதியால் விஷம் கொடுக்கப்பட்டு இவர் இறந்ததாகத்தான் இந்த கேஸ் விசாரணைக்கு வந்திருக்கிறது. இவர் இறந்த தினத்துக்குச் சுமார் பதினைந்து நாள்களுக்கு முந்தியிருந்து நடந்த விஷயங்களை நாம் இப்போது கவனித்தால் போதுமானது.'
'கொலை செய்யப்பட்டிருக்கும் தியாகராஜ பிள்ளைக்கு மூன்று மனைவிகள்... மூன்று மனைவிகள்...'
(ஜூரர்கள் நாராயணசாமி ஐயரும், ராமநாத சாஸ்திரியும் அர்த்த புஷ்டியுடன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஜஸ்டிஸ் ஜகந்நாதன் முகத்திலேகூட லேசாக ஒரு முறுவல் அப்போது ஆடியதாகத் தோன்றியது.)
முதல் மனைவி இன்றும் ஜீவியவந்தராக இருக்கிறார். இவருக்குப் புத்திர சந்தானம் இல்லை என்கிற காரணத்தினால் தியாகராஜ பிள்ளை இரண்டாம் முறை மணம் செய்து கொண்டார். இந்த மனைவியின் மூலம் இரண்டு பெண்களும் ஒரு பிள்ளையும் உண்டு. மூவரும் இருக்கிறார்கள். பிள்ளை ராஜகோபாலனும் இரண்டாவது பெண்ணின் கணவர் சீனிவாசனும் இங்கே ஆஜராகி இருக்கிறார்கள். உரிய காலத்தில், அவர்களுடைய சாட்சியம் தேவையானபோது அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டாம் மனைவி, தியாகராஜ பிள்ளையுடன் அதிக காலம் இல்லை. இவர் மணமான ஆறு வருஷங்களில் காலமாகி விட்டார். பிள்ளை அவர்கள் அதற்குப் பின் மூன்றாம் தாரம் மணம் செய்து கொண்டார். அவள் மூலமாகவும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள்; பதினான்கு வயதில் ஒரு மகள்.... பன்னிரண்டு வயதில் ஒரு மகன்... மகளுக்கு இன்னும் மணமாகவில்லை ; பையன் படிக்கிறான். '
'இரு மாப்பிள்ளைகளில் முதல்வர், கூண்டிலே நிற்கும் கைதி வரதராஜ பிள்ளை என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இவர் சென்னையிலேயே உத்தியோகமாக இருக்கிறார். ஒரு கம்பெனியில் பொறுப்பான பதவியில் முந்நூறு ரூபாய் சம்பாதிக்கிறார். இரண்டாவது மாப்பிள்ளையும் சென்னைவாசிதான். இவருக்கு இங்கே சொந்த வீடும், கிராமத்தில் நிலபுலன்களும் உண்டு. இரு மாப்பிள்ளைகளும் மாமனாரை அடிக்கடி வந்து பார்த்துப் போகிறவர்கள்.'
'தியாகராஜ பிள்ளையின் பங்களாவில் அவருடைய மூத்த மனைவியையும் மூன்றாவது மனைவியையும் அவளுடைய குழந்தைகளையும் தவிர, நிரந்தரமாக இருப்பவர்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களில் பிள்ளை அவர்களின் தூர பந்துவான வெங்கடேசன் என்பவரும் ஒருவர். இந்த கேஸின் பிரதான சாட்சிகளில் ஒருவர் அவர். அவர்மீது கொண்டுள்ள அபிமானத்தினாலும் நம்பிக்கையினாலுமே தியாகராஜ பிள்ளை இவரைத் தம் வீட்டோடு வைத்துக் கொண்டு, தமது அலுவல்களை இவருடைய உதவியுடன் கவனித்துக் கொண்டு வந்திருக்கிறார். '
'பங்களாவின் அவுட் ஹவுஸில் தோட்டக்காரன் மாணிக்கமும், அவன் மனைவி அஞ்சலையும், மருமகள் லட்சுமியும் இருக்கிறார்கள். தோட்டக்கார தம்பதி இருபது வருஷங்களுக்கு மேலாகப் பிள்ளையவர்களுடைய பங்களாவில் இருப்பவர்களாதலால், மிகவும் நம்பகமானவர்கள் என்று பெயர் வாங்கி, அதற்கு அனுசரணையாகவே நாளதுவரை நடந்து வந்திருக்கிறார்கள்.'
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்: உம்... இன்னும் எவ்வளவு பேர்களை ஜூரர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்?
கருணாகரன்: (புன்சிரிப்புடன்) மை லார்ட்... இன்னும் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இரண்டொருவர்தான். ஆனால், அவர்களையும் இப்போது நான் சொல்லவில்லை.... சமயம் வரும்போது அறிமுகப்படுத்துகிறேன்.
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் : எனக்கு ஆட்சேபணை இல்லை.
கருணாகரன் ஜஸ்டிஸிடமிருந்து முகத்தைத் திருப்பி ஜூரர்களை ஒரு நோட்டம் விட்டார். 'என்ன இவர், வளவளவென்று பேசுகிறார்!' என்று போர்மன் நெற்றியிலிருந்த சுருக்கங்கள் குற்றம் சாட்டுவது போல் அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். தொடர்ந்து வேகமாகப் பேசலானார்:
'குற்றம் நடந்த தினத்துக்குச் சுமார் பதினைந்து தினங்களுக்கு முன்பு தியாகராஜ பிள்ளை உடல் நலம் சரியின்றிப் படுத்தார். முதல் இரு தினங்களில் சாதாரணமான ஜூரம்தான் என்பதாகக் குடும்பத்தார் நினைத்துவிட்டனர். மூன்றாவது தினம் தியாகராஜ பிள்ளையின் நிலைமையில் அபிவிருத்தி எதுவும் தோன்றாமல் போகவே, டாக்டர் ஒருத்தரை வரவழைத்துப் பார்க்கச் சொன்னார்கள்.'
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்: டாக்டர் ஒருத்தர் என்றால்?
கருணாகரன்: வைத்தியப் பரீட்சை பாஸ் செய்த டாக்டர்தான், மை லார்ட்!
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் : நான் அதைக் குறிப்பிடவில்லை.... 'ஒருத்தர்' என்றதைக் கேட்டேன். அவர் நோயாளியை அப்போது தான் முதல் தடவையாகப் பார்க்கிறாரா? அல்லது அதற்கு முன்பு வழக்கமாக வைத்தியம் செய்பவரா?
கருணாகரன்: ஓ! மன்னிக்க வேண்டும். என்னுடைய பிசகு... டாக்டர் சாட்சியம் வரும்போது அந்த பாயிண்ட் தானாக வந்து விடும் என்று நினைத்தேன். வழக்கமாகப் பார்க்கும் டாக்டர்தான் அழைக்கப்பட்டார்.
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் : நீங்கள் மேலே தொடர்ந்து பேசலாம்...
"இந்த டாக்டர் வந்து பார்த்து மருந்து கொடுத்து விட்டுப் போனார். மருந்து மூன்று நாள்கள் சாப்பிட்டும் குணம் தெரியவில்லை. பிள்ளை அவர்கள் வரவர மோசமாகிக் கொண்டு வருவதாகத் தெரியவே, இரு மனைவிகளும் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவித்தார்கள். அப்போது பங்களாவுக்கு வந்தவர்கள் இரு பெண்கள், இரண்டு மாப்பிள்ளைகள், நோயாளியின் தமையனார் மற்றும் இரண்டொருவர்... அதைப் பற்றி இப்போது அவசியம் இல்லை. இவர்கள் வந்த பிறகு, நோயாளிக்கு உடல் நலம் மேலும் மோசமாகிவிட்டது என்று தெரிகிறது. '
ஜஸ்டிஸ் : இவர்கள் வந்ததனாலா? (கோர்ட்டில் சிரிப்பு)
கருணாகரன்: மை லார்ட்! அப்படி என் வார்த்தைகளில் ஓர் அர்த்தம் துவனித்திருக்குமானால், மன்னிக்க வேண்டும்.
ஜஸ்டிஸ்: உடல் நலம் மோசமாகிவிட்டது..... அப்புறம் சொல்லுங்கள்....
'டாக்டருக்கு கேஸ் தம்மை மீறிவிடுமோ என்று அச்சம் உண்டாகவே, வேறு ஒரு பெரிய டாக்டரிடம் காண்பித்து யோசனை கேட்டு, முடிந்ததைச் செய்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதினார். இதைப் பிள்ளை அவர்களின் இளைய தாரத்திடமும், மகன் ராஜகோபாலனிடமும், கூண்டில் நிற்கும் கைதியிடமும் அவர் கூறினார். கேப்டன் (டாக்டர்) சதாசிவத்தின் பெயரையும் சிபாரிசு செய்தார். அவர்களுக்குள் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், சில மணி நேரத்துக்குள், தியாகராஜ பிள்ளைக்கு நினைவு தவறிவிட்டது. இனி அபாயம் எந்த நிமிஷமும் நேரலாம் என்று டாக்டர் எச்சரிக்கை செய்யவும், கேப்டன் சதாசிவத்துக்கு உடனே ஆள் அனுப்பத் தீர்மானித்தார்கள்.
அன்றிரவு - அதாவது, அக்டோபர் மாதம் 23-ந் தேதி என்று தெரிகிறது, சதாசிவம் வந்த முதல் தடவையாகத் தியாகராஜ பிள்ளையைப் பரிசோதனை செய்தார். முதல் டாக்டர் கூறியபடியே நிலைமை மிகவும் கவலைக்கிடம் என்று சொல்லி, அதிக நம்பிக்கைக்கு இடமில்லையெனினும், கூடியவரை முயற்சி செய்து பார்க்கலாம் என்று கேப்டன் சதாசிவம் மருந்து கொடுத்தார்.
அவருக்கு அப்போது இருந்த வியாதி என்ன? கொடுத்த ஒளஷதங்கள் எவை என்கிற விவரங்களை நான் சொல்வதைவிட, தக்க சந்தர்ப்பத்தில் டாக்டர்கள் சொல்வதே பொருத்தமாகும். இப்போது அவற்றைச் சொல்லி உங்களை நான் குழப்பப் போவதில்லை.'
கருணாகரன் இந்த இடத்தில் ஜஸ்டிஸ் ஜகந்நாதனைப் பார்த்துக் கொண்டு, மேலே பேசுகிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டது போல் கெளரிசங்கர் ஊகம் செய்து கொண்டார்.
'இதன் பிறகு அடுத்தடுத்து எட்டு விசிட்கள் செய்திருக்கிறார் கேப்டன் சதாசிவம். அவர் சிகிச்சையின் பலனாகத் தியாகராஜ பிள்ளை கண் விழித்தார்; பேசினார்; எழுந்து உட்கார்ந்தார். இரண்டு தினங்கள் பூராவும் தன் நினைவின்றிக் கிடந்தவர், நவம்பர் மாதம் முதல் தேதி தாமாக நிற்கத் தொடங்கவும் அவரை டாக்டர் கண்டித்து உட்காரச் சொன்னார். 'ஒரு வாரம் வரை படுக்கையைவிட்டு அகலக் கூடாது; நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஓய்விலேதான் சீக்கிரம் குணமாவது இருக்கிறது' என்று எச்சரித்து, குடும்ப டாக்டரிடம் மருந்துகள் கொடுப்பது பற்றியும், இரு நர்ஸ்களை அமர்த்தி, ஜாக்கிரதையுடன் கவனித்துக் கொள்ள வேண்டியது பற்றியும் சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டுப் போனார். கேப்டன் சதாசிவம் பேஷன்டைக் கடைசி முறையாக உயிருடன் பார்த்ததும் அப்போதுதான். 'இனிப் பயம் என்பது துளிக்கூட இல்லை ' என்று அவர் சொல்லியதன் பேரில், குடும்பத்தில் எல்லாரும் தைரியமாக மூச்சுவிட்டார்கள்.'
ஒரு விஷயம் மறந்துவிட்டேன். தியாகராஜ பிள்ளை சீக்காகப் படுத்தது முதலே, வரதராஜ பிள்ளை வந்து போய்க் கொண்டிருக்கிறார். உடல்நிலை மோசமாகி விட்டதென்று அங்கேயே வந்த பிறகு மாமனாருக்கு மணிப்படி மருந்து கொடுப்பதும் நேரில் கவனிப்பதுமான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மாமனார்- மாப்பிள்ளை என்ற பாத்யதை ஒரொரு சமயங்களில் அதிகமாக இவர்கள் கொண்டாடிக் கொள்வதும் உண்டு என்ற காரணத்தினால் இவர் மீது அப்போது யாரும் சம்சயம் கொள்ளவில்லை.
தியாகராஜ பிள்ளைக்கு நினைவு தவறியிருந்த சமயம் வரதராஜ பிள்ளை, 'இவர் போனது மாதிரிதான்' என்று சொன்னதற்குச் சாட்சியம் இருக்கிறது. மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் சற்று ஏமாற்றம் கொண்டிருக்கிறார் என்பதற்கும் சாட்சியம் இருக்கிறது. இவற்றைப் பின்னால் கவனிப்போம்.
நவம்பர் மாதம் மூன்றாம் தேதி, பிற்பகலில் தியாகராஜ பிள்ளை உட்கார்ந்து கொண்டு தம் மூத்த மாப்பிள்ளையுடன் பேசியிருக்கிறார். அவர்களிடையே பேச்சு காரசாரமாக இருந்ததென்பதற்கு ஒதுங்கி நின்ற நர்ஸின் சாட்சியம் இருக்கிறது. அவளேதான், 'இப்போது இந்த மாதிரி சர்ச்சைகள் வேண்டாம்; அடுத்த வாரம், அல்லது அடுத்த மாசம் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லியிருக்கிறாள்.
பேசிவிட்டு மாடியிலிருந்து இறங்கும் போது, 'இன்றே இரண்டில் ஒன்று தீர்த்து விடுகிறேன்' என்று பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுத்தபடி வரதராஜ பிள்ளை இறங்கியதை வெங்கடேசன் கேட்டிருக்கிறார்.
மாலை ஆறு மணிக்குக் குடும்பத்து டாக்டர் வந்து கை பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். நோயாளி 'மளமள'வென்று பலம் பெற்று வருகிறார்; 'ஒரு கவலையும் இனிக் கிடையாது' என்று உறுதி கூறியிருக்கிறார். ஒன்பது மணிக்கு நர்ஸ் மாறுமுன் மருந்து கொடுத்திருக்கிறாள். அப்போதும்கூட பிள்ளை சுகமாக இருந்திருக்கிறார். குடும்பத்தினர்கள் எல்லாரும் - மூத்த மாப்பிள்ளை உள்பட - அந்த அறையில் 9.15-க்குக் கூடியிருந்திருக்கிறார்கள். இதுவே அவர்கள் நோயாளியைக் கடைசி முறையாக உயிருடன் பார்த்தது. அப்போது வரதராஜ பிள்ளை ஒன்றுமே பேசாமல், முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டிருக்கிறார்.
நோயாளி 'கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வருவதாகச் சொல்லி, எல்லாரையும் போகும்படி சமிக்ஞை செய்திருக்கிறார். அவரவர்கள் இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள்; அதாவது கூண்டில் நிற்கும் கைதியைத் தவிர. சற்றைக்கெல்லாம் அவர் சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் ஏறியதை இரண்டு பேர் பார்த்திருக்கிறார்கள்.
இப்போது அதே இரவு பன்னிரண்டு மணிக்கு வருகிறோம். நர்ஸ் மருந்து கொடுக்கும் வேளை தவறக் கூடாதென்று அவுன்ஸ் கிளாஸில் மருந்தை ஊற்றிக் கொண்டு போய், நோயாளியை எழுப்பியிருக்கிறாள். பதில் இல்லை. பலமுறை கூப்பிட்டும் பயன் இல்லாமற் போகவே, மார்பிலே கையை வைத்துப் பார்க்கிறாள். ஜீவன் இல்லை; நித்திரையிலேயே அது பறந்தோடி விட்டது.
கீழே சென்று எல்லாரையும் எழுப்பி, டாக்டருக்கும் ஆள் அனுப்பினாள். குடும்பத்து டாக்டர் வந்து பார்த்து, 'இது எப்படி நடந்தது?' என்று திகைத்துப் போனார். நர்ஸைக் கேட்டதற்கு அவள் தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள். கடைசியாக ஒன்பது மணிக்கு மருந்து கொடுத்தவள் பழைய நர்ஸ்; அதற்குப் பிறகு ஒரு மருந்தும் கொடுக்கப்படவில்லை. நோயாளி 9.15-க்குக் கடைசியாக உயிருடன் இருந்து பேசியிருக்கிறார். 'கண்ணைச் சுழற்றுகிறது. இங்கே என்ன பேச்சு. எல்லாரும் எழுந்து போங்கள்!' என்று சொல்லியிருக்கிறார்.
பழைய நர்ஸுக்கும் கேப்டன் சதாசிவத்துக்கும் ஆள்கள் ஓடினார்கள். கேப்டன் சதாசிவம் உடனேயே வந்துவிட்டார். 'இவ்வளவு சீக்கிரமாக நடந்திருக்கிறதே! ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது? எப்படி ஆயிற்று?' என்று அவரும் ஆச்சரியப்பட்டார். பழைய நர்ஸ் கண்ணாலேயே ஜலம் விட்டாள். 'எனக்கு ஒன்றுமே தெரியாது; சீசாவில் இருந்த மிக்ஸ்சர் கடைசி டோஸை நான் கொடுத்தேன்... நான்கு நாளாக நான்தான் மருந்து கொடுக்கிறேன், ஒன்றும் ஆகவில்லையே!' என்றாள்.
கேப்டன் சதாசிவம் உடனே வெகு புத்திசாலித்தனமான காரியம் ஒன்று செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்குத் தகவல் தெரிவித்து, நோயாளி இறந்து போன விஷயமாகத் தாம் சம்சயப்படுவதாகப் புகார் செய்து விட்டார். வைத்திய சாஸ்திரத்தில் பிழைக்க வைப்பது என்பது நிச்சயம் என்று முடியாவிட்டாலும், ஒரு நோயாளி இன்ன காரணத்தினால் தான் இறந்து போவான் என்று தீர்மானமாகச் சொல்லிவிட முடியும் என்று நான் நினைக்கிறேன்.'
(கோர்ட்டில் சிரிப்பு)
கோர்ட் சிப்பந்தி: உஷ்... சைலன்ஸ்! சைலன்ஸ்!
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்: ஜென்டில்மென் ஆப் தி ஜூரி! கேஸினுடைய நுணுக்கங்கள் பற்றி பிராஸிக்யூஷனை நீங்கள் கவனித்துக் கொண்டுவர வேண்டும்.
கருணாகரன்: ஆம், மை லார்ட். ஜூரர்கள் முன்னிலையில் சாட்சிபூர்வமான தகவல்களை அடுக்கடுக்காக, கோர்வையாகக் கொண்டு நிறுத்த வேண்டியது என்னுடைய கடமை. நான் காண்பிக்கும் பாதையிலே சிக்கல் எதுவும் இன்றி, நேர்மையும் உண்மையும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
அதற்காகவே நான் முயன்று வருகிறேன். இந்த கேஸில் நான் சொல்வது தவிர, வேறு எவ்விதமும் நடந்திருக்க முடியாதென்று...
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்: ஆல் ரைட்! ஆல் ரைட்....! நீங்கள் சொல்லி வந்ததை மேலே சொல்லுங்கள்.
'போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து பார்த்துவிட்டு, போலீஸ் சர்ஜனுடைய உதவியுடன் தியாகராஜ பிள்ளையின் உடலைப் பரிசோதனைக்குக் கொண்டு போனார். ஜூரர்களே, பரிசோதனை விவரங்களை இங்கே விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருப்பது என் உத்தேசம் இல்லை. அவற்றைக் காலக் கிரமத்தில் டாக்டர்கள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள். இப்போதைக்கு, கேப்டன் சதாசிவத்தினுடைய சந்தேகம் மிகவும் நியாயமானது என்று கூறி நிறுத்திக் கொள்கிறேன். இறந்து போனவருடைய வயிற்றிலே, அவர் சாப்பிட்ட மருந்துகள் மட்டும் இல்லை; மூன்று மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு விஷம் இருந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது.
'விஷம் கொடுப்பவர் யார்? ஒரு மனிதனை அடியோடு தொலைக்க விரும்புபவர் யார்?' என்னும் ஹேஷ்யங்களில் நாம் ஈடுபடவில்லை. 'யார்?' என்று கண்டுபிடிக்க வேண்டிய வேலையை இப்போது நாம் மேற்கொள்ளவில்லை; அது நமது வேலையும் இல்லை! கூண்டில் இருக்கும் கைதிதான் அதைச் செய்தார் என்பதற்கு பிராஸிக்யூஷன் தரப்பில் சில ஆணித் தரமான சாட்சிகள் இருக்கிறார்கள். நான் உங்கள் முன் அழைத்து வந்து விசாரணை செய்யப்போகும் சாட்சிகள் மூலம் நான் கூறிய வரலாறு ஒவ்வொரு விஷயத்திலும் உண்மையானது என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். எனினும்கூட, என் வரையில் நிச்சயமாகக் கூண்டிலிருப்பவர் குற்றவாளிதான் என்று தெரியும். என்றாலும், உங்களை அப்படியே அதை ஒப்புக் கொள்ளும்படி நான் நிர்ப்பந்திப்பது தகாது. கூண்டிலிருப்பவர் குற்றவாளி என்று நிச்சந்தேகமாக ருசுவாகிவிட்டது என்று நாங்கள் சொல்லவும் இல்லை. சாட்சிகள் எல்லோரையும் நிதானமாகக் கேட்டபின், கைதி நிரபராதியாக இருக்க முடியும் என்று அப்பொழுதும் தோன்றுகிறதா, அவருக்கும் குற்றத்துக்கும் நேரிடையான சம்பந்தம் இல்லாமல் இருக்க முடியுமா என்றெல்லாம் நீங்கள் சிந்தனை செய்யுங்கள்.
ஒரு குற்றம் செய்வது - அதுவும் ஒரு கொலைக்குற்றம் செய்வதென்றால் அதற்குச் சில முக்கியமான அம்சங்கள் இருக்க வேண்டும். இந்த கேஸில் அவற்றை எல்லாம் கைதிதான் அதைச் செய்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றன என்பதையும் நான் குறிப்பிடுகிறேன்.
முதலில் ஒருவரைக் கொன்று தீர்த்துவிட விரும்பக் காரணம், அல்லது நோக்கம் என்ற அம்சம் அவசியமானது. கேளுங்கள், கைதிக்கும் இறந்தவருக்கும் பண விஷயங்களில் தகராறுகள் உண்டு. இவர் அவருடைய மாப்பிள்ளையானதிலிருந்தே இந்தத் தகராறுகள் ஆரம்பமாகிவிட்டன. இதைச் சாட்சியங்கள் மூலம் நான் ருசுப்பிக்கப் போகிறேன். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு தியாகராஜ பிள்ளை ஓர் உயில் எழுதினார். அதில் தமது சொத்திலிருந்து மூத்த மாப்பிள்ளைக்கென்று ஒரு வீடும் ரொக்கமும் எழுதி வைத்திருக்கிறார். அதற்குப் பின் இப்போது அவருடைய குடும்பம் பெருகிவிட்டது; மாப்பிள்ளையின் மீதுள்ள அன்பும் மாறிவிட்டது. 'உயிலை மாற்ற வேண்டும் உடம்பிலே தளர்ச்சி கண்டு விட்டது' என்று பல முறைகள் சொல்லியிருக்கிறார். உயிலை மாற்றுவதால், முக்கியமாக நஷ்டம் அடைபவர் கைதிதான் என்று சொல்ல வேண்டியதில்லை.'
மாப்பிள்ளைக்கும் மாமனாருக்கும் இடையிலே சமீப காலமாகச் சில சச்சரவுகள் நடந்து வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் 'உன்னை ஒழித்து விடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 'இந்த மாப்பிள்ளையே எனக்கு எமனாக வந்திருக்கிறான்' என்று பிள்ளையவர்கள் வருத்தப்பட்டிருக்கிறார். ஒருவர் தவறினால் மற்றொருவர் தீர்த்துக் கட்டியிருப்பார் என்னும் படி சண்டைகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில், வெளி வேஷமாகத்தான் கைதி நோயாளி யிடம் பரிவு காட்டியிருக்கிறார்; உயிலை மாற்றாமல் அவர் நினைவை இழந்ததும் வெளிப்பட சந்தோஷப்பட்டிருக்கிறார். 'இனிமேல் ஏது? அவ்வளவுதான்' என்று தம்மை மறந்து சொல்லியிருக்கிறார். கட்டாயம்